'தொடர்ந்து அவதூறு மற்றும் ஆபாச விமர்சனம்'... 'கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ்'... காவல்துறை அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகை ரோகிணி உள்பட மேலும் 3 பேர் கிஷோர் கே.சாமி மீது புகார்கள் கொடுத்தனர்.

பா.ஜ.க.வின் ஆதரவாளரான கிஷோர் கே.சாமி சமூகவலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவு செய்து பரபரப்பாகப் பேசப்பட்டவர். தி.மு.க. கட்சி மீதும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி இழிவான கருத்துக்களைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வந்தார்.

இது தொடர்பாக சங்கர் நகர் போலீசார் கிஷோர் கே.சாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த வருடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் குறித்து ஆபாச கருத்துக்களை வெளியிட்ட புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கிஷோர் கே.சாமியை 2-வது முறையாகக் கைது செய்தனர்.

இந்த நிலையில் நடிகை ரோகிணி உள்பட மேலும் 3 பேர் கிஷோர் கே.சாமி மீது புகார்கள் கொடுத்தனர். தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததாகப் பதிவான வழக்கில் 3-வது முறையாக கிஷோர் கே.சாமி நேற்று கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் கிஷோர் கே.சாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கச் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் கிஷோர் கே.சாமி ஒரு வருடத்திற்கு ஜாமின் கேட்டு மனு செய்ய முடியாது. இதற்கிடையே கிஷோர் கே.சாமி மீது தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்