"'முதல்'ல 'கொஞ்சம்' ஏளனமா பாத்தாங்க... ஆனா என்ன 'பிரச்சன' வந்தாலும் ஒண்ணு ஆகணும்னு முடிவு பண்ணோம்"... காதலித்த 'திருநங்கை'யை கரம்பிடித்த 'காதலன்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி அருகே வலையன்குளம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஹரினா. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் திருநங்கையாக மாறியுள்ளார்.

அதே ஊரைச் சேர்ந்த ஹரினாவின் தாய்மாமா மகன் கருப்பசாமி டிரைவராக வேலை செய்து வருகிறார். கருப்பசாமி கடந்த ஓராண்டாக ஹரினாவை காதலித்து வந்ததாக தெரிகிறது. சில மாதங்களுக்கு முன் ஹரினாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தனது பெற்றோரிடம் கருப்பசாமி தெரிவித்துள்ளார். முதலில் இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், கருப்பசாமி தனது காதலில் உறுதியாக இருந்ததால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, காரியாபட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கருப்பசாமி - திருநங்கை ஹரினா திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை காரியாபட்டியில் உள்ள திருநங்கைகள் சேர்ந்து நடத்தி வைத்தனர்.

இந்த திருமணம் குறித்து ஹரினா கூறுகையில், 'இரண்டு வருடங்களுக்கு முன்பு திருநங்கையாக நான்  மாறியதை தொடர்ந்து என்னைக் காதலிப்பதாக கருப்பசாமி என்னிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு முதலில் நான் ஆச்சரியமடைந்தேன். மேலும் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். குடும்பத்தினரும், சமூகத்தினரும் என்ன சொல்லும் என முதலில் தயக்கம் இருந்தது. கருப்பசாமி தான் எனக்கு தைரியம் கொடுத்து இரு வீட்டாரின் சம்மதமும் பெற்று இப்போது நாங்கள் நினைத்த மாதிரியே திருமணம் செய்து கொண்டோம்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த திருமணம் குறித்து கருப்பசாமி கூறுகையில், 'ஒரு திருநங்கையை திருமணம் செய்யப் போகிறேன் என நான் விருப்பம் தெரிவித்ததும் என் குடும்பத்தினர் முதலில் என்னை கண்டித்தனர். பெற்றோர்கள் என்னிடம் பல நாட்களாக பேசவில்லை. உறவினர்களும் என்னை ஏளனமாக பார்த்தார்கள். அதன்பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக பேசி எனது பெற்றோர்களை சம்மதிக்க வைத்தேன்' என தெரிவித்தார்.

கருப்பசாமி - ஹரினா திருமண புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்