‘32 வருசத்துக்கு முன்னாடி ஜெயலலிதாவும் இதே முடிவு எடுத்தாங்க’.. மூத்த பத்திரிக்கையாளர் சொன்ன பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார். இந்த நிலையில், தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக நேற்று திடீரென பரபரப்பு அறிக்கை ஒன்றை சசிகலா வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

சசிகலா இந்த திடீர் முடிவு குறித்து தெரிவித்த டிடிவி தினகரன், அரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டிருப்பது தனக்கு வேதனை அளிப்பதாகவும், தான் ஒதுங்கி இருந்தால்தான் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என அவர் நம்புவதால் இந்த முடிவை சசிகலா எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டதுபோல், கடந்த 1989-ம் ஆண்டு ஜெயலலிதாவும் அரசியலை விட்டு விலகுவதாக தெரிவித்ததாக மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த தராசு ஷ்யாம், ‘சசிகாலா தற்போது எடுத்துள்ள இதே முடிவை 1989-ல் (32 வருடங்களுக்கு முன்பு) ஜெயலலிதாவும் எடுத்தார். அரசியலிலிருந்து தான் விலகப்போவதாக கடிதம் எழுதினார். பத்திரிகைகளுக்கும் கடிதம் எழுதினார். அதை நடராஜன் கைப்பற்றி வைத்திருந்தபோது, அதை கண்டுபிடிக்க போலீஸ் சோதனையும் நடைபெற்றது. இந்த முடிவுகள் எல்லாம் அவ்வப்போது மாறக்கூடியவை.

ஒருவேளை திமுக வெற்றிபெற்றுவிட்டால் அந்த பழி தன்மீது வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் சசிகலாவுக்கு இருக்கலாம். தற்போது திமுக, அதிமுக கூட்டணிகள் வலுவாக இருக்கின்றன. ஒருவேளை அங்கு சலசலப்பு ஏற்பட்டால், சில கட்சிகள் சசிகலா இல்லாத அமமுகவுடன் கூட்டணி அமைக்க முன்வரலாம் என்பது அவருடைய எண்ணமாக இருக்கலாம்.

இயற்கைக்கு மாறான தேர்வுகளை உள்ளடக்கியதுதான் அரசியல். எப்படியிருந்தாலும் சசிகலாவின் இந்த முடிவு டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவருடைய பேட்டிகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை தேர்தலுக்கு பின்பு இந்த முடிவு மாறலாம். இது அதிமுகவின் எதிர்காலம் தீர்மானிக்கும். மேலும் தேர்தல் திடீரென்று அறிவிக்கப்பட்டதால் சசிகலாவின் திட்டங்கள் தள்ளிப்போயிருக்கலாம்’ என தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

News Credits: Puthiyathalaimurai

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்