'உங்க English மோசமா இருக்கு'... 'கிண்டலடித்த நெட்டிசன்'... 'நான் வேளச்சேரியில் ஒரு BPOக்கு Interview போனேன்'... என்ன சொன்னாங்க தெரியுமா?... வைரலாகும் ஐபிஎஸ் அதிகாரியின் நச் பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உங்கள் ஆங்கிலம் சரி இல்லையென நெட்டிசன் ஒருவர் கிண்டலடித்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் சொன்ன பதில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

சமீபகாலமாகச் சமூகவலைத்தளங்களில் ஒருவர் தனது கருத்தைக் கூறினாலோ, அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனை குறித்து விவாதித்தாலோ, அவர்கள் சொல்லும் கருத்து குறித்த விவாதத்தைத் தாண்டி தனிநபர் என்ற விமர்சனத்திற்குள் சென்று விடுகிறது. அந்த வகையில் ட்விட்டர் பக்கத்தில் 'தி பிரிண்ட்' ஊடகத்தில் பணியாற்றும் நிருபர் ஒருவர், கொரோனா குறித்து எழும் சந்தேகங்கள் மற்றும் கொரோனா தொடர்பாகக் களத்திலிருந்து பல தரவுகளை 'தி பிரிண்ட்' நிறுவனத்தின் பார்வையாளர்களுக்குத் தரப்படும் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதற்கு நெட்டிசன் ஒருவர், ''இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களின் பணியைப் பாராட்டுகிறேன், ஆனால் உங்கள் ஆங்கில உச்சரிப்பின் தரத்தை உயர்த்துங்கள் அது மிகவும் தேவைப்படுகிற ஒன்று என கமெண்ட்' செய்திருந்தார். இதற்குச் சிலர் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். இவ்வளவு ஆபத்தான சூழ்நிலையில் செய்தியாளர்கள் எந்த அளவிற்கு உழைக்கிறார்கள், ஆனால் அதை எல்லாம் மறைந்து இந்த தருணத்தில் இதுபோன்ற தனிநபர் விமர்சனங்கள் தேவையா எனப் பதிவிட்டிருந்தார்கள்.

இதற்கிடையே இது தொடர்பாகப் பதிலளித்த அந்த செய்தியாளர் ஜோதி, ''இது போல எனது உச்சரிப்பைக் குறை சொல்வது, முதல் முறை அல்ல. நான் சிறு வயதில் கிராமத்தில் வளர்ந்த போது, நான் கான்வென்ட் பள்ளியில் ஆங்கிலம் கற்கவில்லை. அதே நேரத்தில் எங்களுக்கு ஹரியானா மாநில மொழியில் தான் ஆங்கில உச்சரிப்பே சொல்லிக் கொடுக்கப்பட்டது எனப் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த உரையாடல் தொடர்பாகத் தனது கருத்தினை பதிவிட்ட திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வருண் குமார் ஐபிஎஸ், ''கடந்த 2006ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் உள்ள BPO நிறுவனம் ஒன்றில் வேலைக்காக இன்டர்வியூ சென்றிருந்தேன். அப்போது என்னை இன்டர்வியூ செய்த நபர், நீங்கள் பேசுவது ஆங்கிலம் அல்ல, 'தங்கிலிஷ்' (Tanglish). எனவே நீங்கள் இன்னும் உங்கள் ஆங்கில உச்சரிப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும், என என்னை வேலைக்கு எடுக்காமல் நிராகரித்தார்.

ஆனால் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு வேளை அந்த வேலை எனக்குக் கிடைத்திருந்தால் இன்று நான் ஐபிஎஸ் அதிகாரியாக இல்லாமல் போயிருக்கலாம்'' எனப் பதிவிட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி வருண் குமாரின் இந்த பதில் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. பலரும் வருண் குமாரின் பதிலை மேற்கோள் காட்டி அவமானமும், நிராகரிப்பும் தான் நம்மை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் பெரிய சக்தி எனக் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்