'முன்னாள் அமைச்சர் மீதான புகாரில் அதிரடி திருப்பம்'... 'என்கிட்ட 3 கோடி கேட்டாங்க'... மணிகண்டன் பரபரப்பு விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி புகாரளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடோடிகள் படத்தில் நடித்த திரைப்பட நடிகை சாந்தினி, முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது கொடுத்துள்ள புகார் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தான். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வழக்கறிஞருடன் சென்ற அவர், மணிகண்டன் மீது புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார்.

நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான சாந்தினிக்கு, மலேசியா தான் பூர்வீகம். கடந்த 2017ஆம் ஆண்டு பணி நிமித்தமாகச் சென்னை வந்த போது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். பின்னர், நெருங்கிப் பழகத் தொடங்கிய நிலையில், தம் மீது காதல் வயப்பட்ட மணிகண்டன், திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்துச் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகக் கூறியிருக்கிறார்.

நெருங்கிப் பழகியதன் விளைவாகத் தாம் 3 முறை கருவுற்ற நிலையில், தம்மை வலுக்கடாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகப் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், தற்போது திருமணம் செய்துகொள்ள மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதோடு, தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும் அச்சுறுத்துவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

மணிகண்டன் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதோடு மட்டுமல்லாது அவரோடு எடுத்துக் கொண்டதாகக் கூறப்படும் புகைப்படங்கள் மற்றும் அவரோடு செல்போனில் உரையாடிய ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மணிகண்டன், ''நடிகை சாந்தினியை யார் என்றே தனக்குத் தெரியாது என மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதோடு பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் இவ்வாறு செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், ''சில புகைப்படங்கள் இருப்பதாக அந்த கும்பல் கூறியது. பணம் கொடுத்தல் வெளியே சொல்ல மாட்டோம் என அந்தக் கும்பல் கூறியது. நேரில் சென்று விசாரித்த போது அவர்கள் பணம் பறிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது. 3 கோடி ரூபாய் கொடு. 2 கோடி ரூபாய் கொடு.30 லட்சம் ரூபாய் கொடு என என்னிடம் பேரம் பேசினர். தவறு செய்தவர்கள் பயப்பட வேண்டும்.

நான் ஏன் பயப்பட வேண்டும்” என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகார் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்