'மக்களே உஷார்'...'எல்லாம் நம்ம கையில தான் இருக்கு'... 'இல்ல, அந்த கசப்பு மருந்தை கொடுத்துதான் ஆகணும்'... தமிழக அரசு எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்தது. ஆனால் அதற்குப் பிறகு நடந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காற்றில் பறந்தது. மக்களும் முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றுவது என கொரோனா குறித்த அச்சம் கொஞ்சமும் இல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. தமிழக அரசு தளர்வுகளை நீக்கி மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்குப் பொதுமக்கள் ஒத்துழைத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு உதவி புரிந்து, கொரோனா தொற்றைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அப்படி இல்லாமல் அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மீறி நடந்தால் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க அரசால் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று விகிதம் (Positivity Rate) மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2021 வரை தொடர்ந்து குறைந்து வந்தது.

தற்போது ஏப்ரல் 2021-இல் சராசரியாகத் தினமும் 3900 அதிகமான நபர்களுக்கு புதிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள், நடமாடும் காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மையங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு, நோய் உறுதி செய்யப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், கோவிட் கவனிப்பு மையங்களில் அனுமதிக்கவும் அல்லது வீட்டில் தனிமைப்படுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முகக்கவசம் அணிதல், சோப்பு போட்டு அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், வீட்டில் தனிமைப்படுத்தும் முறை போன்ற கோவிட் சார்ந்த பழக்கங்கள் (COVID Appropriate Behaviour) பற்றி தீவிரமாகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் தமிழ்நாடு அரசு, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஏப்ரல் 30 நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது.

நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு ஏப்ரல் 10 (நாளை) முதல் முற்றிலுமாக தடைவிதித்தும், ஒரு சில செயல்பாடுகளுக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும் அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு (Curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும். தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

எனவே இந்த கொரோனா தொற்று இரண்டாவது அலையைச் சமாளிக்க, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது'' எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்