மின்விசிறியில் மனைவி, வேப்பமரத்தில் கணவன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் உறைந்த குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மனைவி தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நாட்டார்பட்டியை சேர்ந்தவர் வீரணன் (30). இவரது மனைவி பவித்ரா (23). கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வீரணன் சரியாக வேலைக்கு செல்லாமல், மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பவித்ரா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். யதேர்ச்சையாக அவரது வீட்டுக்கு சென்ற அக்கம்பக்கத்தினர், பவித்ரா தூக்கிட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி இறந்ததால் வீரணன் மனமுடைந்து போயுள்ளார். இதனால் கடந்த செவ்வாய் கிழமை அதிகாலை தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரமாக வீரணனை காணாமல் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தையை தவிக்கவிட்டு கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SUICIDEATTEMPT, HUSBANDANDWIFE, DINDIGUL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்