அத மறந்திட்டு ஏன் போனீங்க நேசமணி?.. நண்பா நேசா..! ஹர்பஜன் சிங்கின் வைரல் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான ‘ப்ரே ஃபார் நேசமணி’ என்ற ஹேஸ்டேக் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேற்றில் இருந்து உலக அளவில் டிரெண்டிங்கில் ஒரு பெயர் காண்ட்ராக்டர் நேசமணி. கடந்த 2001 -ம் ஆண்டு தமிழில் ‘ப்ரண்ட்ஸ்’ என்ற திரைப்படம் வெளியானது. இதில் விஜய், சூர்யா, தேவையாணி, வடிவேலு, ரமேஷ் கண்ணா, சார்லி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் பெய்ண்டிங் காண்ட்ராக்டராக ‘நேசமணி’ என்னும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். அப்படத்தில் வரும் காமெடி காட்சிகள் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பேஸ்புக்கில் ‘சிவில் இன்ஜினியரிங் லேனர்ஸ்’ என்ற பக்கத்தில் ஒரு சுத்தியலை பதிவிட்டு உங்கள் ஊரில் இதற்கு பெயர் என்ன என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நகைச்சுவையாக ஒருவர்,‘இதன் பெயர் சுத்தியல். அடித்தால் டங் டங் என்று சத்தம் வரும். இதை செய்தது அவரது அண்ணன் மகன்தான்’ என பதிலளித்திருந்தார். இதற்கு மற்றொருவர் அவர் நலமாக இருக்கிறாரா? என கேட்க, ‘அவர் தற்போது நலமாக இருக்கிறார். அவரது டீம் தண்ணீர் தெளித்து அவரை காப்பாற்றியது’ என பதிலளித்துள்ளார். உடனே ‘நான் அவருக்காக வேண்டிக்கொள்கிறேன்’ என மற்றொருவர் சொல்ல உருவானது #Pray_For_Nesamani என்ற ஹேஷ் டேக். இது குறித்து பலரும் இணையதளங்களில் பதிவிட ஒரே நைட்டில் உலக அளவில் டிரெண்டானது.

இந்நிலையில் இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani’ என பதிவிட்டுள்ளார்.

PRAYFORNESAMANI, VADIVELU4LIFE

மற்ற செய்திகள்