'காசு தரலன்னா உன்ன குடும்பத்தோட...' 'மெடிக்கல் ஷாப் ஓனரை மிரட்டிய ரவுடி...' 'வெளிவந்த ஆடியோ...' 'பக்கா ப்ளான் போட்டு தூக்கிய போலீசார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கூடுவாஞ்சேரி பகுதியில் மருந்துக்கடை வைத்திருப்பவரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய சிலம்பரசன் என்ற ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மணிவாக்கத்தை சேர்ந்த வினோத் என்பவர் கூடுவாஞ்சேரி பகுதியில் மருந்துக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்னும் ரவுடி மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சிலம்பரசன் மற்றும் வினோத் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

ஆடியோவில் எங்கள் பகுதியில் கடை வைத்துக்கொண்டு பணம் தர மறுப்பாயா, உன் குடும்பத்தை இல்லாமல் ஆக்கி விடுவேன், கடையை காலி செய்து ஓடி விடு என மேலும் பல தகாத வார்த்தைகளால் மிரட்டியுள்ளார் ரவுடி சிலம்பரசன்.

இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன், கூடுவாஞ்சேரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஓட்டேரி காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சிலம்பரசனை தேடிவந்தனர்.

இதையறிந்த ரவுடி வினோத் ஆந்திரா மாநிலம் தப்பி செல்ல முயன்ற போது தனிப்படை போலீசார் அவரை தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் மடக்கினர். கைது செய்யப்பட்ட சிலம்பரசன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கூடுவாஞ்சேரி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கைதுசெய்யப்பட்ட சிலம்பரசனிடமிருந்து மூன்று கைபேசி மற்றும் கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பே அவர் மீது  9 வழக்குகள் உள்ளன எனவும் கூறினார். மேலும் பொழிச்சலூர் பகுதியில் இரும்பு வியாபாரியை மாமூல் கேட்டு மிரட்டியதாக சங்கர்நகர் போலீசாரால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 22-ம் தேதி தான் அவர் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 'முதலில் ரவுடி சிலம்பரசன் மீது புகார் அளிக்க மருந்துக்கடை உரிமையாளர் தயக்கம் காட்டினார். அதையடுத்து போலீசார் மூலம் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று நம்பிக்கை அளித்தபின் தைரியத்துடன் பணம் கேட்டு மிரட்டிய சிலம்பரசன் மீது புகார் அளித்தார். செங்கல்பட்டு மாவட்டம் அல்லாமல் பிற பகுதிகளிலும் ரவுடிகளுக்கு இடம் இல்லை. மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் இடையூறு ஏற்படுத்தும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு ரவுடிகள் மூலம் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் அதை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம். தற்போது சிலம்பரசனிடம் இருந்து கைப்பற்றிய செல்போன் மூலம் யார்யாரிடம் தொடர்பில் இருந்தார் என ஆராய்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்படும். மேலும் இது போன்ற ரவுடிகளை குறித்து தகவல் தெரிவிப்பவரின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆகவே பொதுமக்கள் எந்த பிரச்சினை வந்தாலும் உடனடியாக போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்