நிலத்தை உழுதபோது ஏற்பட்ட ‘திடீர்’ பள்ளம்.. ஒருவேளை பழங்கால சுரங்கமா இருக்குமோ..? சேலம் அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் அருகே டிராக்டர் மூலம் நிலத்தை உழுதபோது திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறை கிளாக்காடு பகுதியைச் சோ்ந்தவர் விவசாயி துரைசாமி. இவருக்கு சொந்தமான நிலத்தில், நேற்று டிராக்டா் கொண்டு உழதுள்ளார். அப்போது எதிா்பாராத விதமாக நிலத்தில் சுமாா் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இந்த தகவல் வேகமாக பரவவே, உடனே கிராம மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கருமந்துறை கிராம நிா்வாக அலுவலா் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனை அடுத்து வட்டாட்சியா் உத்தரவின் பேரில், பள்ளம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றி வருவாய்த் துறையினா் பாதுகாப்பு வேலி அமைத்தனர். இதனைத் தொடர்ந்து திருச்சி தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். ஓரிரு நாட்களில் தொல்லியல் துறை அதிகாரிகள் கருமந்துறை கிராமத்திற்கு வந்து இந்த பள்ளம் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினா் கூறுகையில், கல்வராயன் மலைக் கிராமங்களில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கிடைத்துள்ள கற்காலக் கருவிகள், கற்குவியல், கல் திட்டைகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன. இதனால் கருமந்துறை கிராமத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம், பாதாள தானிய சேமிப்பு குதிராக இருக்கலாம். ஆனாலும் தொல்லியல் துறை ஆய்விற்கு பிறகே உறுதியான தகவலை அறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்