'PSBB ஸ்கூல்’ல நடந்தது போல'... 'எனக்கும் நடந்திருக்கு'... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ’96’ பட நடிகை கெளரியின் பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிஎஸ்பிபி பள்ளியில் நடந்தது போன்ற கொடுமைகளைத் தானும் அனுபவித்துள்ளதாக நடிகை கெளரி கிஷன் தெரிவித்துள்ளார்.

சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் மாணவிகளுக்கு எதிராக நடந்த கொடுமை தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகரில் பத்மா சேஷாத்ரி என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 12ஆம் வகுப்புக்கு வணிகவியல் ஆசிரியராக பணியாற்றிவரும் ராஜகோபாலன் மீது, அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவ-மாணவிகள் ஏற்கனவே புகார் அளித்த நிலையில், ராஜகோபலான் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகக் குறுஞ்செய்திகளை அனுப்பியதும், பள்ளியில் இதே போன்ற செயலில் மேலும் சிலர் ஈடுபட்டதாகவும் கூறினார்.

இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளியில் நடந்தது போன்ற கொடுமைகளைத் தானும் அடையாறில் படித்துக்கொண்டிருந்த போது அனுபவித்துள்ளதாக நடிகை கெளரி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், ''பள்ளிக்காலங்களில் என்னைப் போன்று பல மாணவர்கள் இது போன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களால் வேதனை அடைந்தனர்.

பள்ளிகள் உங்களை வளர்த்தெடுக்கும் தளமாக இருக்க வேண்டுமே தவிர நீங்கள் முத்திரை குத்தப்படிவீர்களோ என்ற பயத்தை விதைக்கக் கூடாது. அண்மையில் பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள், அடையாறில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கும் அரங்கேறின. அதை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

என்னுடைய நண்பர்களிடம் பேசும்போது அவர்களும் இது போன்ற நெருக்கடிகளை எதிர் கொண்டிருப்பதை அறிந்தேன். அதில் தவறாகப் பேசுவது, சாதிக்கொடுமை, உடலை வைத்து அசிங்கப்படுத்துவது, ஆதாரங்கள் இல்லாமல் மாணவர்கள் மீது பழிசுமத்துவதும் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கும்.

அவற்றை இப்போது நினைத்தால் போது கூட எனது நெஞ்சம் பாரமாகிறது. இது போன்ற கொடுமைகளை எதிர்கொண்டவர்கள், அதனைப் பொதுவெளியில் முன்வைக்க வேண்டும். அதன் மூலம் வருங்கால மாணவர்களுக்கு இது போன்ற கொடுமைகள் நடக்காமல் நாம் தவிர்க்க முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்