‘நா ஹரிணி.. கல்யாணத்த எங்க ஊர்லயே வெச்சிக்கலாம்..’ மேட்ரிமோனியில் பெண் குரலில் பேசி சீட்டிங்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த். சுயமாக விளம்பர நிறுவனம் நடத்தி வரும் திருமணமாகாத இவர் மேட்ரிமோனியல் மூலமாக பெண் தேடியபோது இவருக்கு நிகழ்ந்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் ஸ்தானம் நன்றாக இருந்தும், 42 வயதான ஆனந்துக்கு திருமணமாகவில்லை என்பதால் மேட்ரிமோனியலில் ரிஜிஸ்டர் செய்திருக்கிறார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த போன் கால் வந்தது. கோயமுத்தூரில் இருந்து ஹரிணி பேசுவதாக தொடங்கிய அந்த பெண் குரல், ஆனந்தின் போட்டோவை மேட்ரிமோனில் பார்த்ததாகவும், ஆனந்தை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் ஹரிணி தெரிவித்துள்ளார்.

அந்த பரவசத்தில் ஆனந்த் இருந்தபோதுதான், ஆனந்திடம், கோயமுத்தூரில் உள்ள தனது உறவினர்கள் சூழ திருமணம் செய்துகொள்ளலாம். எப்போது நாம் சந்திக்கலாம் என்றும் ஹரிணி கேட்டுள்ளார். சில நாட்கள் கழித்து ஹரிணியிடம் இருந்து ஆனந்துக்கு வந்தது ஒரு எமர்ஜென்சி போன் கால். அட்டென் செய்த ஆனந்துக்கு அதிச்சி தரும் வகையில் தனது சித்தியின் கேன்சர் நோய்க்கு சிகிச்சை அளிக்க அவசரமாக 60 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று ஹரிணி கூறியுள்ளார். அதை நம்பி  ஆனந்தும் பணம் போட்டுள்ளார்.

பிறெகன்ன, நாம் திருமணம் செய்துகொண்ட பிறகு வாழப்போகும் புதுவீட்டுக்கு ஏ.சி வாங்கணும் அத்தான், பிரிட்ஜ் வாங்கணும் அத்தான் என பணமாகவும் பொருளாகவும் ஆனந்திடம் ஹரிணி நிறையவே சுருட்டியுள்ளார். ஆனால் தன்னை சந்திக்காமலே டிமிக்கி கொடுத்து வந்த ஹரிணியை கட்டாயப்படுத்தி வடபழநி ஆற்காடு ரோட்டுக்கு ஆனந்த் வரச்சொல்ல, வந்ததோ ஒரு ஆண். தன்னை ஹரிணி மேடம் அனுப்பியதாகவும் ஹரிணியால் வரமுடியவில்லை என்றும் வந்தவர் கூறியுள்ளார். அவரது குரலில் இலேசாக ஹரிணியின் குரல் தென்பட்டுள்ளது. இந்த தருணம்தான், ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த ஆனந்த், தான் ஏமாற்றப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

உடனே அந்த ஆண் நபரைப் பிடித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் ஆனந்த். விசாரித்ததில் அந்த நபர் 39 வயதான செந்தில். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இவரது டார்கெட்டே மேட்ரிமோனியலில் பெண் தேடும் 40 வயதுக்கும் அதிகமான் ஆண்கள்தான். செந்திலின் முதலீடு வெறும் 4000 ரூபாய்தான். மேட்ரிமோனிக்கு இந்த தொகையை கட்டிவிட்டு அதில் வரும் ஆண்களின் புரொஃபைலை எடுத்து அவர்களுக்கு போன் செய்து, பெண் குரலில் மிமிக்ரி செய்து பேசி மயக்கி பணம் பிடுங்குவதுதான். இப்படி பலரையும் ஏமாற்றியுள்ள செந்திலின் வலையில் கடைசியாக சிக்கியவர்தான் ஆனந்த்.

CHEAT, FRAUDSTER, CHENNAI, BIZARRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்