'இரவு 12 மணிக்கு கேக் கட்டிங்'... 'ஜாலியா காரில் வந்த நண்பர்களுக்கு நடந்த கோரம்'... காரின் டிக்கியை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை பூ மார்க்கெட்டை சேர்ந்தவர் கார்த்திக் ராஜூ. 21 வயது இளைஞரான இவர் கடந்த 3 மாதங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரின் நண்பரான மோகன் ஹரி கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்துள்ளார். மேலும் இந்திரநேசன், மணிகண்டன், பிரிஜாஸ் ஆகிய 5 பேரும் ஒரே கல்லூரியில் படித்த நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் இவர்களின் மற்றொரு நண்பரான கவுண்டம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவருடைய வீட்டுக்கு காரில் சென்றுள்ளார்கள்.

நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி விட்டு சிறிது நேரம் அங்கு நேரம் செலவழித்து விட்டு அதிகாலை 2 மணியளவில் இந்திரநேசன் உள்பட 5 பேரும் காரில் ஆனைக்கட்டிக்கு, புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். காரை மோகன் ஹரி ஓட்டினார். கார் கோவை அருகே தடாகம் ரோடு காளையனூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்திலிருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் பயங்கர சத்தத்துடன் அப்பளம் போல நொறுங்கியது. காருக்குள் இருந்த 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

அது அதிகாலை நேரம் என்பதால் விபத்து நடந்தது பற்றி யாருக்கும் தெரியவில்லை. அப்போது சின்னதடாகத்தில் இருந்து கோவை நோக்கி வந்த ஒரு லாரி டிரைவர், சாலையோரமாக கார் விபத்தில் சிக்கி உள்ளே இளைஞர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து சத்தம் போட்டார். இதையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஓடி வந்து காரில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள். கடப்பாரையால் நெம்பி காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் அது முடியாமல் போனது. சம்பவம் குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காருக்குள் சிக்கிய 5 பேரையும் போலீசார் மீட்டார்கள்.

இதில் கார்த்திக் ராஜூ, மோகன் ஹரி, இந்திரநேசன், மணிகண்டன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரிஜாஸ்சை மீட்ட போலீசார், சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே காரின் பின்பக்கத்தைப் பார்த்த போது அதில் மது பாட்டில்கள் கிடந்ததைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள்.

25 வயதைக் கூட தாண்டாத 4 இளைஞர்களும் கோரமாக விபத்தில் சிக்கி உயிரிழக்க மது தான் காரணமாக என்று விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறியுள்ளார்கள். இதற்கிடையே விபத்தில் இறந்த இந்திரநேசன் வீட்டிற்கு ஒரே மகன் ஆவர். தனது ஒரே ஆசை மகனை இழந்துவிட்டோமே என அவரது பெற்றோர் கதறி அழுதார்கள். கல்லூரியை முடித்து வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த 4 இளைஞர்கள் கோரமாக விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்