'ஏ.சி... சோஃபா... செல்போன் சார்ஜர்!'.. சிறைக்குள் சொகுசு வாழ்க்கை!.. வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் அடைக்கப்பட்டிருந்த சிறையில் அவருக்கு கிடைத்த சலுகைகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவரான நடிகை சாந்தினி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், மணிகண்டனுடன் தான் 5 வருடங்கள் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும், 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்து, பின்னர் அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும், மணிகண்டன் தற்போது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நடிகை சாந்தினி புகார் தெரிவித்திருந்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறையில் மணிகண்டனுக்கு செல்போன், ஏ.சி., சோஃபா உள்ளிட்ட சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறைத்துறை டி.எஸ்.பி. தலைமையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், மணிகண்டன் இன்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், மணிகண்டனுக்கு சிறையில் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறையால் அவர் கிளைச் சிறையில் இருந்து மாற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே மணிகண்டனை 5 நாட்கள் காவலில் எடுக்க காவல்துறையினர் தாக்கல் செய்த மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்காக அவர் புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு சைதாபேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்