“ரசிகர்கள் இப்படி பண்ணா, அடுத்த 4,5 வருடம் கழித்து இந்த விஷயமே இருக்காது!” - திருப்பூர் சுப்பிரமணியம் ஆரூடம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. பொங்கலை முன்னிட்டு 11.01.2023 அன்று துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. H.வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில், போனி கபூர் தயாரித்த இப்படத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இதேபோல் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் அதே 11.01.2023 அன்று வெளியானது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படங்களின் வரவேற்பை பற்றி பேசியுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “வாரிசு குடும்பப் படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம், துணிவு படம் ஆக்‌ஷன் படம் என்பதால், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்கிறார்கள். இரண்டு படங்களுமே சரிநிகரான நடிகர்கள் என்பதால் படங்கள் வரவேற்பை பெறுகின்றன. ஜனங்களும் இருவரின் படங்களையுமே பார்க்கின்றனர். இந்த படத்தை ஒருநாள் பார்க்கின்றனர். அந்த படத்தை ஒருநாள் பார்க்கின்றனர்.

இரண்டு படங்களுமே 11-ஆம் தேதி, ரிலீஸ் ஆனது. காலகாலமாகவே ஜனவரி 14-ஆம் தேதி தான் படங்கள் ரிலீஸ் ஆகும். அன்று பெரும்பாலும் போகி பண்டிகை அல்லது பொங்கல் பண்டிகை (தை 1-ஆம் தேதி) வரும்.  அப்பதான் ரிலீஸ் பண்ணுவாங்க. அப்போதெல்லாம் படங்கள் 50 நாட்கள் ஓடும். அதனால் வெள்ளி, சனி என கிழமை பார்க்காமல் ரிலீஸ் செய்தார்கள். இப்போது துணிவு, வாரிசு இரண்டு படங்களுமே புதன் கிழமை அன்று ரிலீஸ் ஆனபோது கூட்டம் சூப்பராக இருந்தது. வியாழன்  அன்று கொஞ்சம் டல்லாக இருந்தது. ஆனாலும் நகரங்களில் பெரிய பாதிப்பு இல்லை. கிராமப்புறங்களில் பெண்கள், குடும்பங்கள் எல்லாம் பண்டிகைகளை தான் கொண்டாடுவதில் மும்முரம் காட்டுவார்கள். படத்துக்கு போவதில்லை. எனவே வியாழன், வெள்ளி கிராமப்புறங்களில் டல்லாக இருந்தது. சனி, ஞாயிறுகளில் நகரம், கிராமம் என எல்லா இடங்களிலுமே பெரும்பாலும் ஹவுஸ்ஃபுல்லாக ஆனது. இந்த 2 படங்களும் சரிநிகரான ரெஸ்பான்ஸ் வருவதால், எந்த தியேட்டரிலும் ஒரு படத்தை தூக்கிவிட்டு இன்னொரு படத்துக்கான ஸ்கிரீனை அதிகப்படுத்துவதற்கான் வாய்ப்பே இல்லை.” என குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே சென்னையில் படம் பார்க்க வந்த பார்வையாளர் ஒருவரது மரணம் குறித்தும் திருப்பூர் சுப்ரமணியம் பேசியிருந்தார். முன்னதாக சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்பவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக வந்துகொண்டிருந்த கண்டைனர் லாரி மீது ஆடியபடியே வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து, அவரது முதுகுத் தண்டில் பலத்த காயம் உண்டானது. அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி பேசிய திருப்பூர் சுப்பிரமணியம், “இது தியேட்டரில் நடந்த விசயம் இல்லை. ரோட்டில் நடந்த விசயம்,. அப்படி தியேட்டரில் இது போன்ற விவகாரம் நடந்தால், கண்டிப்பாக முன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமா என்பது குறித்து நாம் சொல்லலாம்.  சில தியேட்டர்களிலும் இப்படியான சில சில சம்பவங்கள் நடந்தன. ரசிகர்கள் இப்படி நடந்துகொண்டால், அடுத்த சில வருடங்களில் ரசிகர்கள் ஷோவே இருக்காது. இப்போதே மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களும், சிங்கிள் தியேட்டர்களும் ரசிகர்கள் ஷோ போடுவதில்லை. திருப்பூர், கோவை என பல ஊர்களிலும் உள்ள தியேட்டர்கள் ரசிகர்கள் ஷோ போடுவதில்லை. இன்னும் 4,5 வருடங்களில் ரசிகர்கள் ஷோ கண்டிப்பாக இருக்காது. முதல் காட்சி 9 மணிக்கு போட்டாலும் ரசிகர் மன்றத்துக்கு கொடுக்க மாட்டார்கள். அதற்கு அடுத்த சில வருடங்களில் வாய்ப்பில்லாமல் போகும்” என தெரிவித்துள்ளார்.

VARISU, THUNIVU, வாரிசு, துணிவு, விஜய், அஜித், திருப்பூர் சுப்பிரமணியம், TIRUPUR SUBRAMANIAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்