'சென்னையில் 'போலீஸ் ரோந்து' வண்டியை கடத்திய டாக்டர்'... 'இப்படி ஒரு காரணமா'?... சென்னையை கலங்க வைத்த நள்ளிரவு சேஸிங்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போலீஸ் ரோந்து வாகனத்தை மருத்துவர் கடத்தினாரா? இந்த தலைப்பைப் பார்க்கும் போதே பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது.

அரக்கோணம், சால்பேட்டையைச் சேர்ந்தவர் முத்து விக்னேஷ். 31 வயதான இவர் எம்பிபிஎஸ், எம்.டி படித்து விட்டுத் தோல் சிகிச்சை நிபுணராகக் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு நண்பர்களுடன் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட அவர், மது அருந்தியுள்ளார். பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் தனது காரில் சேத்துப்பட்டு வழியாக கீழ்ப்பாக்கம் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை அருகே போக்குவரத்து போலீஸார் அவரது காரை மடக்கியுள்ளனர்.

அங்குச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீஸார், மருத்துவர் விக்னேஸின் ஆவணங்களைச் சோதித்து, பின் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தாரா எனச் சோதித்தபோது மது அருந்தியிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து ''நீங்கள் மது போதையில் உள்ளீர்கள். எனவே வாகனம் ஓட்ட தகுதியில்லை என்பதை விளக்கி, வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், அபராதப் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறினர்.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத முத்து விக்னேஷ், தான் ஒரு மருத்துவர் எனவே எனது வாகனத்தைக் கொடுங்கள் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். ஆனால் போலீஸார் வாகனத்தைத் தர மறுத்து அனுப்பிவிட்டனர். இதையடுத்து முத்து விக்னேஷ் ஆத்திரத்தில் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் இரவு 2 மணி அளவில்  கீழ்ப்பாக்கம் சிக்னல் அருகே சாலையில் போக்குவரத்துக் குறியீடுகளை பெயிண்ட் மூலம் வரையும் பணியில் உதவி ஆய்வாளர் சிவசங்கரன், ரோந்து வாகன ஓட்டுநர் ஞானவேல் இருவரும் ஈடுபட்டிருந்தனர்.

அந்த பணியானது நடந்து கொண்டிருந்த நேரத்தில் அதிகாலை 3.45 மணி அளவில் அங்கு மீண்டும் வந்த மருத்துவர் முத்து விக்னேஷ் அங்கு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா போக்குவரத்து ரோந்து வாகனத்தின் அருகில் சென்றுள்ளார். அப்போது வேலை மும்முரத்திலிருந்த சிவசங்கரனும், வாகன ஓட்டுநர் ஞானவேலும் அவரைக் கவனிக்கவில்லை. தனது வாகனத்தைப் பறிமுதல் செய்த ஆத்திரத்திலிருந்த மருத்துவர் முத்து விக்னேஷ், போலீஸாரின் ரோந்து வாகனம் சாவியுடன் இருப்பதைப் பார்த்து அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்து வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பாராத போலீசார், அதிர்ச்சி அடைந்த நிலையில் அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தில் ஏறி ரோந்து வாகனத்தைத் துரத்திச் சென்றனர். போலீஸார் துரத்துவதைப் பார்த்த டாக்டர், காரை வேகமாக ஓட்டிச் சென்றார். கீழ்ப்பாக்கம் சங்கம் திரையரங்கைக் கடந்து எழும்பூர் நோக்கி கார் வேகமாகச் சென்றபோது, எழும்பூர் கெங்கு ரெட்டி பாலம் அருகே எதிரில் வந்த ஆட்டோ மீது மோதியது.இதையடுத்து காரை மடக்கிய போலீஸார் காரிலிருந்த முத்து விக்னேஷைப் பிடித்துக் கைது செய்தனர். ஆட்டோவில் வந்த 2 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

மதுபோதையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் போலீஸ் ரோந்து வாகனத்தையே கடத்திய டாக்டர் முத்து விக்னேஷ் மீது வாகனத்தைக் கடத்தியது, மிரட்டல் விடுத்தது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, தாறுமாறாக வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து ரோந்து வாகனத்தைக் கடத்தியது, போலீஸாரை மிரட்டியது, தரக்குறைவாகப் பேசியது, அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற குற்றங்களுக்காக கீழ்ப்பாக்கம் போலீஸார், மருத்துவர் முத்து விக்னேஷைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மருத்துவம் படித்து, தன்னை நம்பி வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவரே மது போதையில் போலீஸ் வாகனத்தையே கடத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்