'என் நெஞ்சை உறையவைத்து விட்டது'... 'மா.சுப்பிரமணியன் இளைய மகன் கொரோனாவால் உயிரிழப்பு'... ஸ்டாலின் இரங்கல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை சைதாப்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்குக் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், லேசான அறிகுறி இருந்ததால் இருவரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். இந்நிலையில், அவரது இரண்டாவது மகன் அன்பழகன் (34) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். அன்பழகனுக்குத் தொற்று அதிகம் இருந்த காரணத்தால், சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அழைக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அன்பழகனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று 'நெகட்டிவ்' என வந்தது. இந்நிலையில், தொற்று பாதிப்பின் பின்விளைவு காரணமாக உடல்நலம் குன்றிய அன்பழகன் இன்று மரணம் அடைந்தார். மகனின் மறைவு மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது. ஏற்கெனவே உடல்நலம் குன்றி இருந்த அன்பழகனை மா.சுப்பிரமணியனும், அவரது துணைவியார் காஞ்சனா சுப்பிரமணியனும், கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்துவந்ததை கரோனா வந்து பறித்துச் சென்று விட்டது.

மா.சு. இணையருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா? அன்பழகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்!" இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்