VIDEO: அப்பாவி Single-ஐ நடுத்தெருவில் நிறுத்திய 'திருமண வரன்'!.. Matrimony மூலம் நூதன மோசடி!.. 'இளம்பெண்' சிக்கியது எப்படி?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலம் ஆண்களுக்கு வலைவிரித்து திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு நகை பணத்துடன் தலைமறைவாகும் மோசடி பெண்ணின் திடுக்கிடும் பின்னணி வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இரு சக்கர வாகன மெக்கானிக் செல்லப்பாண்டி. இவர் திருமணத்திற்காக மேட்ரிமோனியல் மூலம் பெண் தேடி உள்ளார். அப்போது புதுச்சேரி நேரு தெருவைச் சேர்ந்த ஷோபிகா என்ற பெண்ணை பார்த்துள்ளார். அந்த பெண்ணை இவருக்கு பிடித்துப்போகவே, திருமணம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

                        

இந்த நிலையில், தனக்கு தாய் தந்தை யாரும் இல்லை என்று கூறிய ஷோபிகா, சுனாமியில் அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக உருகியுள்ளார். இதை அப்படியே நம்பிய செல்லப்பாண்டி, கடந்த மார்ச் மாதம் எளிமையான முறையில் புதுச்சேரியில் வைத்து நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளார்.

வரதட்சனை வாங்கி திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைகளுக்கு மத்தியில், வரதட்சனை எதுவும் கேட்காமல், நிச்சயதார்த்தத்தின் போது ஒன்றரை பவுன் தங்க சங்கிலி, பட்டுப்புடவை, 25000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை ஷோபிகாவிடம் கொடுத்துள்ளார் செல்லப்பாண்டி.

                                     

அதன்பிறகு ஷோபிகாவிடமிருந்து கடந்த 5 மாதங்களாக எவ்விதமான தகவலும் இல்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த செல்லப்பாண்டி தனது உறவினரை அழைத்துக் கொண்டு புதுச்சேரியில் உள்ள ஷோபிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால், "வீடு வாடகைக்கு விடப்படும்" எனப் பலகை இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லப்பாண்டி அருகில் உள்ளவரிடம் விசாரித்தபோது அந்தப் பெண் மோசடி செய்பவர் என்றும், இதேபோல் பலரையும் திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அந்தப் பெண்ணை பிடிப்பதற்காக திட்டம் தீட்டிய செல்லபாண்டி, ஷோபிகாவின் உறவினரை தொடர்பு கொண்டு திருமணத்திற்காக புடவை மற்றும் நகை எடுக்க வேண்டும், ஆகையால் திண்டுக்கல்லுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் வந்த ஷோபிகாவை பிடித்து வைத்துக் கொண்டு மோசடி செய்தது தொடர்பாக கேட்டபோது ஷோபிகா தான் செய்தது தவறு என்றும், செல்லப்பாண்டி இடமிருந்து வாங்கிய நகை, பட்டுப்புடவை, பணம் ஆகியவற்றை திரும்பத் தருவதாக கூறிவிட்டு காரில் ஏறி தப்பிச்செல்ல முயன்றார். உடனே சுதாரித்துக் கொண்ட செல்லப்பாண்டி, கார் முன்னே படுத்துக்கொண்டு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினார்.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது போலீசாரிடம் பிடி கொடுக்காமல் பேசி தப்பவே முயற்சி செய்தார்.

இதனை ஏற்காத செல்லப்பாண்டி, திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த ஷோபிகா மீது புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஷோபிகாவை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 40 வயதான ஷோபிகா Photoshop செய்யப்பட்ட போட்டோ மூலம் தன்னை இளம் பெண்ணாக காட்டிக் கொண்டு, மாப்பிள்ளைகளுக்கு வலை விரித்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த பெண் இது போல மேலும் சிலரிடம் மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்