'எவ்வளவு செல்லமா வளர்த்தேன்'... 'லவ்வர் கூட சேர்ந்து 'ஸ்கெட்ச்' போட்ட மகள்'...உறைய வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, அவரது மகளே காதலனுடன் சேர்ந்து கொன்ற சம்பவம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்தவர் சஜீவ். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருக்கு, மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். ஒரே மகள் என்பதால், சஜீவ் மகளை மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தார். அவர் வெளிநாட்டில் வேலை செய்ததால் மகள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தார். இந்நிலையில் அவரது மகள்  தனியார் பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்தார். அப்போது அந்த பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்த இளைஞருக்கும் சஜீவ்வின் மகளுக்கும் பழக்கம் ஏற்பட, அது நாளடைவில் காதலாக மாறியது .

மகளின் காதல் விவகாரம் குறித்து அறிந்த சஜீவ்வின் மனைவி தனது மகளை கண்டித்துள்ளார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத அவரின் மகள் தாய்க்கு தெரியாமல் காதலனுடன் பழகி வந்தார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்த கணவர் சஜீவ்விடம், மகளின் காதல் விவகாரம் குறித்து அவரது மனைவி கூறினார். இதையடுத்து வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய சஜீவ், மகளிடம் காதலை கைவிடும் படி கூறினார். ஆனால் தந்தையின் பேச்சை சிறிதும் கேட்காத அவரின் மகள், யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த நகையை எடுத்துக் கொண்டு, காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனால் அதிர்ந்து போன சஜீவ், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்நிலையம் வந்த சஜீவ்வின் மகள், தான் பேருந்து ஓட்டுனரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்தார். சஜீவ் எவ்வளவோ கெஞ்சியும் அவரது மகள் செவி சாய்க்கவில்லை. 

இதையடுத்து தாங்கள் இருவரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று, போலீசாரிடம் அந்த பெண் கூறியதால் அவர்களை போலீசார் விடுவித்தனர்.பாசமாக வளர்ந்த மகள் தன்னை விட்டுப்போனதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சஜீவ், அவ்வப்போது மகளின் காதலனை சந்தித்து பிரச்சனை செய்து வந்தார். இது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சஜீவின் மகள், அவரது காதலன் மற்றும் நண்பர் ஒருவர் ஆகிய 3 பேரும் சஜீவின் வீட்டிற்கு சென்றனர். அப்போது சஜீவ் வீட்டில் தனியாக இருந்தார். இதனை பயன்படுத்தி கொண்டு, மூன்று பேரும் சேர்ந்து சஜீவ்வை தடியால் தாக்கினார்கள். ரத்தவெள்ளத்தில் சஜீவ் கீழே சாய்ந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதற்கிடையே சஜீவ்வின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சஜீவ் உயிரிழந்தார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை அவரது ஒரே மகள் காதலனுடன் சேர்ந்த கொலை செய்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்