'உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பம்பர்கள்'... 'சென்னையிலும் தொடங்கிய அதிரடி'... அதிகாரிகளின் அதிரடி சோதனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பம்பர்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

முனி சரக்கு வாகனங்கள் மற்றும் சொந்த பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் கார்களில், விபத்தில் சிக்கினால் அதிக சேதம் ஏற்படாமல் பாதுகாக்கக் கூடுதல் பம்பர்களை பொருத்துகின்றனர். ஆனால் அந்த வாகனங்கள் விபத்துகளில் சிக்கும்போது வாகனங்களில் உள்ள சென்சார் வேலை செய்யாத நிலை ஏற்பட்டு, அந்த வாகனங்களில் உள்ள ஏர் பலூன் வேலை செய்யாமல் போவதால் உள்ளே பயணிப்போருக்குப் பாதுகாப்பு இல்லாமல் உயிர்ப் பலி ஏற்படுகிறது.

அதேபோன்று கூடுதல் பம்பர் பொருத்தப்பட்ட வாகனத்தில் மோதும் வாகனங்களுக்கு அதிக சேதம் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க வாகனத்தில் கூடுதலாகப் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை ஐகோர்ட்டு உத்தரவின்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பம்பர்களை அகற்றி வருகிறார்கள். பலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் முன்னிலையில் புளியந்தோப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அந்த வழியாகச் சென்ற 16 கார்களின் முன்புறம் கூடுதலாகப் பொருத்தப்பட்டு இருந்த பம்பர்களை அகற்றினர்.

அதேபோல் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் பக்கவாட்டில் வைக்க வேண்டிய கண்ணாடிகளை, உட்புறமாக வைத்து இருப்பதை அறிந்து, அவற்றை வெளியே வைக்க உத்தரவிட்டதுடன், பின்னால் அமர்ந்துள்ள பயணிகளைப் பார்க்கும் வகையில் ஆட்டோவின் உள்ளே வைக்கப்பட்டு இருந்த முகம் பார்க்கும் கண்ணாடிகளையும் அகற்றினர்.

மற்ற செய்திகள்