'நாளை பதவியேற்பு'... 'முதல்வராக ஸ்டாலின் போட போகும் முதல் கையெழுத்து'... பெரும் எதிர்பார்ப்பில் தமிழகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதில் திமுக மட்டும் 125 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார்.

கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிமையாகப் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  நாளை காலை ஒன்பது மணிக்கு முதல்வராகப் பதவியேற்கும் ஸ்டாலின், பின்னர் தலைமைச் செயலகம் சென்று முதலமைச்சராகப் பொறுப்பேற்று, பணிகளை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சராக பணியைத் தொடங்கும் அவர் முதன் முதலாக எந்தெந்த கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதியின்படி கொரோனா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான முதல் உத்தரவில் முதலமைச்சரான பின்னர் ஸ்டாலின் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவதாகப் பெண்களுக்கு உள்ளூர் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அரசு உத்தரவிலும் அவர் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது. மூன்றாவதாக முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கும் உத்தரவு, மகளிர் பேறுகால உதவித்தொகை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதற்கான உத்தரவு, இந்து ஆலயங்களைச் சீரமைக்க 1000 கோடி ரூபாய் நிதி, மசூதி, தேவாலயங்களைச் சீரமைக்க 200 கோடி ரூபாய் நிதி ஆகியவற்றுக்கான உத்தரவுகளில் ஏதாவது ஒன்றில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்குத் திருமண உதவித்தொகையாகத் தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்துவதுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் அவர் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்