'சமூகவலைத்தளத்தில் வந்த விளம்பரம்'... 'கைநிறைய சம்பளம் என்ற கனவோடு இன்டெர்வியூ போன இளம்பெண்'... சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி மாவட்டம் பரக்காவட்டுவிளையை சேர்ந்த இளம்பெண் மினிமோல். இவர் நியூஸ் ரீடர் பணி தேடி சென்னை கிண்டியில் தனது தோழிகளுடன் கடந்த 10 நாட்களாகத் தங்கியுள்ளார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் சினிமாவில் நடிக்க மற்றும் செய்தி வாசிக்கும் நியூஸ் ரீடர் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் வந்துள்ளது. அதைப் பார்த்து அதில் குறிப்பிட்ட தொலைப்பேசி எண்ணிற்குத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அப்போது எதிர்முனையில் மினிமோளிடம் பேசிய நபர், நியூஸ் ரீடர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகக் கூறி, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு மேக்கப் ஒத்திகை வாருங்கள் எனக் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட ஹோட்டல் அறைக்குச் சென்ற மினிமோளிடம் வந்து அறிமுகமான பெண் ஒருவர், உங்கள் நகைகளைக் கழற்றி வைத்துவிட்டு முகத்தைக் கழுவிக் கொண்டு வாருங்கள், நாம் மேக்கப் போட ஆரம்பிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து மினிமோல் கழிவறைக்குச் சென்ற நிலையில், அவரை உள்ளேயே வைத்துப் பூட்டி விட்டு அந்த கும்பல் சென்றுவிட்டது. இதையடுத்து அவர் கதவைத் தட்டி கூச்சல் போட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த விடுதியின் மேலாளர் கழிவறை கதவை திறந்து விட்டுள்ளார். அப்போது தான் அந்த பெண்ணும், தொலைப்பேசியில் பேசிய நபரும் மினிமோளை ஏமாற்றி அந்த ஹோட்டல் அறைக்கு வரவழைத்து, அவரிடம் இருந்த தங்க நகைகளைப் பறித்துச் சென்றது அவருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் மினிமோல் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அடையாறு துணை ஆணையாளரின் தனிப்படையினர் புகார்தாரரைத் தொடர்பு கொண்ட செல்போன் எண்கள் மற்றும் ஹோட்டலில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து பார்த்து அதில் கிடைத்த தடயங்களைக் கொண்டு குற்றவாளியைத் தேடி வந்தார்கள்.

இந்நிலையில் பாலவாக்கம் குப்பம் பகுதியில் வசித்து வந்த தேனி பண்ணைபுரம் பகுதியைச் சேர்ந்த ராவின் பிஸ்ட்ரோ என்ற நபரையும் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த தீபா (எ) செண்பக வள்ளி என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராவின் பிஸ்ட்ரோ என்பவர் மேடவாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள தலப்பாகட்டி ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் அந்த வேலை விட்டு விட்டு, ஏற்கெனவே திருமணமாகி இரு மகன்கள் இருக்கும் நிலையில் தன் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்த தீபாவை ராவின் பிஸ்ட்ரோ இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு பாலவாக்கம் குப்பத்தில் வசித்து வருவதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இருவரும் மேன் பவர் ஏஜென்சி என்ற பெயரில் வீட்டு வேலைக்குத் தேவைப்படும் ஆட்களைக்  கண்டறிந்து அவர்களை வேலைக்குச் சேர்த்து விட்டுள்ளனர். அப்போது அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு சினிமா மற்றும் செய்தி வாசிப்பாளராக வேலைக்கு ஆட்கள் தேவை எனப் பொய்யாக வேலைக்கு விளம்பரம் அளித்தாகவும், அதைத் தொடர்ந்து தன்னை தொடர்பு கொண்ட பெண்மணியை ஏமாற்றி நகைகளைத் திருடிச் சென்றதாகவும் கூறியுள்ளனர். 

நூதன முறையில் கவனத்தைத் திசை திருப்பி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் இருவரையும் கைது செய்த தனிப்படையினர் அவர்களிடம் இருந்து மோசடி செய்த நகைகளையும் மீட்டனர். பொது மக்கள் வேலை வாங்கி தருவதாக வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்ளுமாறும் வேலைவாய்ப்பிற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நேரடியாக அணுகுமாறும் இதுபோன்ற மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அடையார் துணை ஆணையர் விக்ரமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்