தடபுடலாக நடந்த 'விருந்து'... மணப்பெண்ணின் தாயாரை 'பாதியில்' அழைத்துச்சென்ற அதிகாரிகள்... அடுத்து நாமதான் போல... 'அதிர்ச்சி'யில் உறவினர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மணப்பெண்ணின் தாயாரை அதிகாரிகள் கையோடு அழைத்து சென்றதால் உறவினர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

கொரோனா காரணமாக திருமணம் போன்ற சடங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது, இ-பாஸ் போன்றவற்றால் பலரும் சிம்பிளாக நாலைந்து பேருடன் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மணப்பெண்ணின் தாயாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை விருந்து நடந்து கொண்டிருக்கும் போதே அதிகாரிகள் அழைத்துச்சென்ற சம்பவம் நடந்துள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதற்காக பெண் வீட்டார் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். அவர்களுக்கு ஆரல்வாய்மொழி சோதனையில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மதியம் மணமகன் வீட்டில் விருந்து நடைபெற்றது. தடபுடலாக விருந்து நடைபெற்று கொண்டிருக்கும்போதே மணப்பெண்ணின் தாயாரை சுகாதார அதிகாரிகள் கையோடு அழைத்து சென்றனர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருமண வீட்டுக்கு வந்த அதிகாரிகள் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து திருமணத்தில் கலந்து கொண்ட 45 பேர் குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து அந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மணமகன், மணமகள் உள்ளிட்ட உறவினர்கள் 5 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், 5 நாட்கள் கழித்து அவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்