'சுழற்சி முறையில் அதிகாரிகள்'... 'முதல்வர் ஸ்டாலினுக்கு' வழங்கப்படும் பாதுகாப்பில் உள்ள சிறப்பம்சங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இதுவரை எதிர்க்கட்சி தலைவராகப் பாதுகாப்பைப் பெற்று வந்த முதல்வர் ஸ்டாலின் இனிமேல் எதுமாதிரியான பாதுகாப்பைப் பெறுவார் என்பது குறித்த ஒரு பார்வை.

தமிழக அரசியல் தலைவர்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருக்கும், என்.எஸ்.ஜி எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர். இந்தியாவிலேயே முக்கிய வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே, என்எஸ்ஜி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முகாந்திரம் இருந்தால் மட்டுமே மத்திய உள்துறை இந்த பாதுகாப்பை வழங்குகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திமுக தலைவருமான, முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதிக்கும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் எஸ்.எஸ்.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு ஒன்றை உருவாக்கினார்.

தற்போது மத்திய உள்துறை அமைச்சரின் காஷ்மீருக்கான ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் இதற்குத் தலைமையேற்று வடிவமைத்தார். இது முழுக்க முழுக்க முதல்வருக்கான பாதுகாப்புக்காக, போலீஸில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வைத்து உருவாக்கப்பட்டது. இதற்குப் பயிற்சி அளிக்க பிஎஸ்எஃபிலிருந்து மனோகரன் வரவழைக்கப்பட்டு தமிழக கேடராக மாற்றப்பட்டார். அவர் தலைமையில் இப்பிரிவு செயல்பட்டு வந்தது. 700 போலீஸாருக்கு மேல் கொண்ட அமைப்பாக இப்பிரிவு இயங்கியது.

இந்த சூழ்நிலையில் கருணாநிதி ஆட்சி காலத்தில் எஸ்.எஸ்.ஜி படையை 140 என்கிற அளவுக்குக் குறைத்து ‘கோர்செல்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கோர்செல் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். கோர்செல் முழுக்க முழுக்க முதல்வர் பாதுகாப்புக்கானது. கோர்செல் பிரிவு என்பது தனிப்பிரிவு அது எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்பிரிவு இதில் ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 3 ஆய்வாளர்கள் தலைமையில் 3 ஷிப்டுகளும் இயங்கும் வகையில் பாதுகாப்பை அளிப்பார்கள். அனைவரும் சஃபாரி உடையுடன் இயங்குவார்கள்.

இவர்கள் தான் முதல்வருடன் மெய்க்காவல்கள் போல் செல்வார்கள். முதல்வரின் கான்வாயில் இவர்கள்தான் பொறுப்பேற்றுச் செல்வார்கள். முதல்வர் இல்லம், அலுவலகம், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதல்வர் உடன் இருந்தும் நிகழ்ச்சிக்கு முன்னர் பாதுகாப்பு குறித்துக் கண்காணித்து அனுமதி வழங்குவது, நிகழ்ச்சி நடக்கும்போது நிகழ்ச்சிப்பகுதி, சுற்றுப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பையும் கண்காணிப்பார்கள். இதற்கான ஒரு கேம்ப் அலுவலகம் முதல்வர் இல்லத்திலேயே 24 மணி நேரம் இயங்கும்.

தற்போது ஸ்டாலின் முதல்வரான நிலையில் அவருக்கு “கோர்செல்” எனப்படும் அதே வகை பாதுகாப்பு வழங்கப்படும். இது தவிர “ செக்யூரிட்டி சென்னை போலீஸ்” (எஸ்சிபி) எனும் பிரிவு உள்ளது. இந்தப்பிரிவும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் வெடிகுண்டு சோதனை, மோப்ப நாய் சோதனை, ஜாமர்கள் போடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளையும், தலைமைச் செயலகத்திலும் முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் இடங்களிலும் பாதுகாப்பை வழங்குவார்கள்.

இது தவிரச் சென்னை மாநகர போலீசாரும், ஆயுத படை போலீசாரும் ஸ்டாலின் செல்லும் இடங்களுக்குப் பாதுகாப்புப் பணிக்குச் செல்வார்கள். இதுதவிர முதல்வர் இல்லத்தைச் சுற்றி சாலைத் தடுப்பு அமைத்துப் பாதுகாப்பதும் இவர்கள் பணி. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதை அவருக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பைத்தாண்டி முதல்வர் கான்வாய் எனப்படும் குண்டுத்துளைக்காத, அரசு இலச்சினை பொருத்திய கார், விஐபி எஸ்கார்டு என மூன்று பிரிவினர் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்