‘என்ஜினியரிங் மாணவரை கடத்திய கும்பல்’.. ‘ஸ்கெட்ச் போட்டு மடக்கிய போலீசார்’ விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் அருகே கல்லூரி மாணவனை சகமாணவர்களே கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் கோகுல். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போது கோகுலை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றுள்ளது.

இதனை அடுத்து கோகுலின் பெற்றோரிடம் செல்போனில் தொடர்புகொண்டு 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனே தனிப்படை அமைத்து போலீசார் தேடிதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதனிடையே மீண்டும் போன் செய்த கடத்தல் கும்பல் பிணைத்தொகையை 5 லட்சமாக குறைத்து, ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி அங்குவந்து தருமாறு கூறியுள்ளனர்.

இதனை கோகுலின் பெற்றோர் தனிப்படை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து காகிதங்களை பணம்போல் வைத்து கடத்தல் கும்பல் சொன்ன இடத்தில் வைத்துள்ளனர். அப்போது கோகுலை விட்டுவிட்டு பணத்தை எடுக்க வரும்போது மறைந்திருந்த தனிப்படை போலீசார் கடத்தல் கும்பலை பிடித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கோகுலுடன் பயிலும் சகமாணவர்கள் என தெரியவந்துள்ளது. கடத்தலில் ஈடுப்பட்ட 4 மாணவர்களை கைது செய்த போலீசார் இதில் வேறுயாருக்கேணும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்திற்காக கல்லூரி மாணவனை சகமாணவர்களே கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAMILNADUPOLICE, KIDNAP, ENGINEERING, STUDENTS, VELLORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்