புதுக்கோட்டை மாணவி ஆணவக்கொலை?... 'கண்ணீருடன்' காவல் நிலையம் சென்ற காதலன்... 'ஷாக்' தரும் பிளாஷ்பேக்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக காதலன் காவல் நிலையம் சென்றிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் விவேக்(20). இவரும் அதே பகுதியில் கல்லூரி படித்து வந்த சாவித்திரி(19) என்னும் கல்லூரி மாணவியும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

சாவித்திரிக்கு அவரது வீட்டினர் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து சாவித்திரி, விவேக்கிடம் தன்னை அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார். தொடர்ந்து விவேக்-சாவித்திரி இருவரும் திருமணம் செய்துகொள்ள எண்ணி, வாடகைக்கார் ஒன்றை எடுத்துக்கொண்டு கடந்த 7-ம் தேதி கோயம்புத்தூர் சென்றுள்ளனர். கரூர் அருகே குளித்தலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் இவர்களை விசாரித்துள்ளனர்.

அதில் விவேக்கிற்கு 21 வயது பூர்த்தியடைய 4 மாதம் இருப்பதால் இருவரது பெற்றோரிடமும் தகவல் தெரிவித்து, பேச்சுவார்த்தை நடத்தி தனித்தனியே பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். அப்போது பெற்றோருடன் சென்றால் என்னை கொலை செய்து விடுவார்கள் என்று சாவித்திரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி சாவித்திரி தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உடலை பெற்றோர் எரித்துள்ளனர். காவல் நிலையத்திலும் இதுகுறித்து அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. இதையறிந்த விவேக் மாதர் சங்க உதவியுடன்  மாவட்ட எஸ்.பி அருண்சக்தி குமாரிடம் மனு அளித்துள்ளார். தொடர்ந்து அந்த மனுவை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி இதுகுறித்து விசாரணை நடத்துமாறு எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து சாவித்திரி தாய் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்