'மனைவியின் தங்கச்சியையும் எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க'... 'அடம் பிடித்த மருமகன் செய்த வேலை'... நிலைகுலைந்து போன மாமனார், மாமியார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மனைவியின் தங்கையையும் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என இளைஞர் ஒருவர் செய்த செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி சம்பூர்ணம். இவர்களது மகளான ராஜேஸ்வரியைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துக்குளி மேற்கு பள்ளபாளையத்தை சேர்ந்த பிரபுவுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஸ்ரீபரணி என்ற ஆண் குழந்தை உள்ளது.

இதனிடையே திருமணமான சிறிது நாளிலேயே பிரபு தனது மனைவி ராஜேஸ்வரியின் தங்கையையும் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அடம் பிடித்துள்ளார். மருமகனின் இந்த எதிர்பாராத ஆசையை பார்த்து அதிர்ந்துபோன பிரபுவின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

நீ மனசாட்சியுடன் தான் நடந்து கொள்கிறாயா என பிரபுவுடன் அவரது மனைவி சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபு, தனது மனைவி, மற்றும் குழந்தையைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என கலங்கிய கருப்புசாமியும் அவரது மனைவி சம்பூர்ணமும் தனது மகள் ராஜேஸ்வரியைப் பிரபுவிடம் சமாதானம் பேசி அனுப்பி வைக்க முடிவு செய்தனர். இதற்காகப் பிரபுவை அவினாசி துலுக்கமுத்தூர் பிரிவு அருகே வருமாறு கூறியுள்ளனர்.

அதன்படி பிரபு துலுக்க முத்தூர் பிரிவுக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து கருப்புசாமி, அவருடைய மனைவி சம்பூர்ணம் ஆகியோரும், ஸ்ரீ பரணியுடன் ராஜேஸ்வரியும் அங்கு வந்தனர். அப்போது அங்கு வந்த பிரபு தனது மாமனார், மாமியாரிடம் “ உங்களது இளைய மகளை ஏன் எனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை” என மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்து பிரச்சனை செய்தார்.

உன்னிடம் சமாதானம் பேசி எனது மகளை அனுப்பி வைக்கத் தான் வந்தோம் எனப் பிரபுவின் மாமனார் மற்றும் மாமியார் கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து, வயதானவர்கள் என்று கூட பார்க்காமல், தனது மாமனார் மற்றும் மாமியாரைத் தாக்கியுள்ளார். இதில் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சம்பூர்ணம் கொடுத்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணம் ஆகி குழந்தை பிறந்து மனைவியுடன் குடும்பம் நடத்தி வருபவர், மனைவியின் தங்கையையும் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறி மாமனார், மாமியாரைத் தாக்கிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்