"கொரோனா எல்லாம் ஒன்னுமே கிடையாது... 3 வேளையும் 'சூப்பர்' சாப்பாடு!.. கேரம் போர்டு, தாயம்..." - கொரோனா முகாமில் இருந்து பெண்கள் 'பரபரப்பு' தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை கொடிசியா கொரோனா சிறப்பு முகாமில் சிகிச்சை பெற்று வரும் பெண்கள் சிலர், தங்களுக்கு மூன்று வேளை முட்டையுடன் உணவு வழங்கப்படுவதாகவும், கேரம் போர்டு விளையாடி பொழுதைக் கழிப்பதாகவும் அண்டை வீட்டாருக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பியுள்ளனர்.

கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அதை தவிர்த்து நோய் தொற்றுக்குள்ளானவர்களை ஒதுக்கப்பட்டவர்களைப் போல அக்கம் பக்கத்தினர் ஏளனமாகப் பார்க்கும் போக்கு இன்னும் தொடர்கிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்புக்குள்ளானதால் அண்டை வீட்டாரால் கேலிக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் சிலர் கோவை கொடீசியாவில் உள்ள சிகிச்சை முகாமில் 3 வேளையும் முட்டை, பழம், ரொட்டி, சாப்பாடு என்று விதவிதமாக உண்டு மகிழ்ச்சியாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சாப்பாடு மட்டும் அல்ல, தாங்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதால் கேரம் விளையாடி பொழுதைக் கழிப்பதாகவும், சிகிச்சை முகாமில் நிம்மதியாக இருப்பதாகவும் வீடியோ எடுத்து, தங்களது அக்கம் பக்கத்து வீட்டில் உள்ள பெண்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்க்கும் மக்களுக்கு கொரோனா குறித்த அச்சம் நீங்கும் வகையில் இருந்தாலும், கொரோனா குறித்த விழிப்புணர்வை மங்கச்செய்யும் வகையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறியில்லாமலும், மிகவும் குறைந்த அறிகுறியுடனும் கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த தொற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எனவே, அந்த வீடியோவில் இருப்பவர்களை வைத்துக் கொண்டு 'கொரோனா எல்லாம் ஒன்றுமே இல்லை' என்று மெத்தனமாக இருக்க வேணடாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்