'2 கிலோ தங்க நகைகள்... 58 கிலோ வெள்ளி'... மேலும் வரதட்சணை கேட்ட மாமியார்!.. ஊர் முழுவதம் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்!.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் கோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட குடும்பத்தினர் குறித்து மணமகள் வீட்டார் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அவமானப்படுத்தியுள்ளனர்.

கோவை செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கல்பனா. இவரது கணவர் ஸ்ரீகாந்த். இவர்கள் காந்திபுரம் 7 வது வீதியில் பஞ்சரத்தினம் ஜெம்ஸ் என்ற பெயரில் ராசிக்கல் ஜோதிட நிலையம் நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் ரித்தீஷ் என்பவருக்கும், சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகள் அன்னப்பூரணிக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. கோவையில் திருமண வரவேற்பும் நடைபெற்றது.

திருமணத்தின் போது 2 கிலோ தங்க நகைகள், 58 கிலோ வெள்ளி பொருட்கள், வைர நகைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. மருமகள் அன்னப்பூரணி குடும்பத்தினர் வசதியானவர்கள் என்பதால்,  திருமணம் முடிந்து மூன்றே மாதத்தில் கூடுதலாக வரதட்சணையாக கார், வீடு, நகை வழங்க வேண்டும் என அன்னபூரணியை துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

                                

இந்நிலையில், அன்னபூரணிக்கு உடல்நிலையில் பிரச்சினை இருப்பதாக கூறி, அவரை சென்னைக்கு அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். கடந்த 2019 ஏப்ரல் மாதம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், அன்னப்பூரணியை தொடர்பு கொள்ளவில்லை.

பின்னர், மே 8ஆம் தேதி அன்னப்பூரணி கோவைக்கு வந்து கணவரின் வீட்டிற்கு சென்றபோது, கணவர் ரித்திஷ், அவரது பெற்றோர் கல்பனா, ஸ்ரீகாந்த் ஆகியோர் கூடுதல் வரதட்சணை இல்லாமல் வரக்கூடாது எனக் கூறி வீட்டிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து, கணவருடன் சேர்ந்து வாழவைக்க கோரி அன்னப்பூரணி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையறிந்த ரித்தீஷ் மற்றும் அவரது பெற்றோர், அன்னப்பூரணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. ஒரு கோடி மதிப்பிலான கார், வீடு  ஆகியவை வாங்கி வராவிட்டால் சேர்த்துக்கொள்ள முடியாது என தெரிவிக்கவே அன்னப்பூரணி கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படாமல் தொடர்ந்து காலதாமதம் செய்யப்பட்டு வந்ததால், கோவை மகளிர் நீதிமன்றத்தில் அன்னபூரணி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம், உடனடியாக புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யவும், எப்.ஐ.ஆர் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்திரவிட்டது.

              

இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 10 ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாதேவி இதுகுறித்து வழக்கு பதிவு செய்தார். வரதட்சணை கேட்டு மிரட்டியதாக கணவர் ரித்தீஷ், அவரது பெற்றோர்  கல்பனா, ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், வரதட்சணை கேட்டு துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், வழக்குபதிவு செய்த தகவல் பொது மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, ராசிக்கல் ஜோதிட நிலையம் செயல்படும் பகுதியில் பெண்ணின் உறவினர்கள் நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்