'ஊரடங்கு நீட்டிக்கப்படுமா'?... 'மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ள முதல்வர்'... எதிர்பார்ப்பில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ந்தேதி மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறையாத காரணத்தினால் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. 8-வது கட்டமாகக் கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த கால கட்டத்தில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

அதில் முக்கியமாக இ-பாஸ் ரத்து செய்யப்பட்டது. பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்களும் திறக்கப்பட்டன. கடைகள் திறப்பு நேரமும் நீட்டிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 8-ம் கட்ட ஊரடங்கு வருகிற 30-ந்தேதி முடிவடைகிறது.

இந்நிலையில் ஊரடங்கு முடிவதற்கு முன்பாக முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துவார். அதில் அடுத்த கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதாக, வேண்டாமா? என்பது பற்றியும், தளர்வுகளை அறிவிப்பது பற்றியும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்த வகையில் வருகிற 29-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

அதன்பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது ஊரடங்கு முடிவுக்கு வருமா? என்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். இதற்கிடையே தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்படுமா அல்லது முழுமையான தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்