'கமிஷனர் சார்'... 'இளைஞர் சொன்ன புகார்'...'ஆரம்பமே அதிரடி'... பொதுமக்களிடம் 'வீடியோ காலில்' பேசிய கமிஷனர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மாநகர காவல் ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றதும் தனது முதல் அதிரடியாக வீடியோ கால் மூலமாகப் பொதுமக்களிடம் அவர்களின் புகார்களைக் கேட்டறிந்தார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக ஏ.கே. விஸ்வநாதன் பணியாற்றி வந்த நிலையில் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய ஆணையாளராகப் பதவியேற்ற மகேஷ் குமார் அகர்வால் ‘வீடியோ கால்’ மூலம் பொதுமக்களிடம் பேசி குறைகளைக் கேட்டறியப் போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை நேற்று உடனடியாக செயல்படுத்தி விட்டார்.

வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை பொதுமக்களிடம் வீடியோ காலில் பேசுவதற்கு அவர் நேரம் ஒதுக்கி உள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று பொதுமக்கள் 35 பேர்களிடம் ‘வீடியோ கால்’ வழியாகப் பேசி குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது வீடியோ காலில் வந்த தினேஷ் என்ற இளைஞர் தனது புகாரைத் தெரிவித்தார். எனக்குத்  தெரிந்த  நபருக்குப் பணத் தேவை இருந்ததால், ஒருவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி கொடுத்தேன்.

ஆனால் அவர் திருப்பி தராத காரணத்தினால் நகைகளை அடகு வைத்து பணம் அடைத்தேன். இதுதொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் 2019- பிப்ரவரி மாதத்தில் புகாரளித்தேன். போலீஸார் விசாரித்தபோது பணத்தை மாதம்தோறும் தருவதாகக் எழுதிக் கொடுத்தார். ஆனால், தற்போது பணத்தைத் தராமல் இழுத்தடிக்கிறார்' என்று கூறினார். தினேஷ் கூறியதைக் கேட்ட கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், இந்த வாட்ஸ் அப் நம்பருக்கு விவரங்களை அனுப்புங்கள் என்று கூறினார். அவரைத் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் வந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

பொதுமக்கள் சொன்ன குறைகளில் திருட்டு, ‘ஆன்-லைன்’ மோசடி, நில அபகரிப்பு, கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை, காசோலை மோசடி போன்றவை தான் அதிகமாகக் காணப்பட்டது. சிலர் இ-பாஸ் கேட்டனர். சிலர் ஊரடங்கில் தங்களுக்கு உள்ள தொல்லைகள் குறித்து கமிஷனரிடம் எடுத்துக் கூறினார்கள்.

கமிஷனர் எடுத்துள்ள இந்த முயற்சி தற்போது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் பொதுமக்கள் 6369100100 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் அடுத்து வரும் திங்கட்கிழமை அன்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை கமிஷனரோடு வீடியோ காலில் பேசலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்