'அப்பா ரொம்ப கஷ்டப்படுறாரு'...'ஆனா நான்'...'சென்னை மாணவியின் சோக முடிவு'...உருக்கமான கடிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதம் காவல்துறையினரிடம் கிடைத்துள்ளது.

திருவொற்றியூர் ரெயில் நிலையம் சாலையைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர், சென்னை மாநகராட்சி 5-வது மண்டலத்தில் சென்னை குடிநீர் வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் கீர்த்தனா. 18 வயது நிரம்பிய இவர். மணலி சேலைவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் கல்லூரியில் பருவத்தேர்வு நடைபெற்றது. தேர்வை எழுதிய அவர், வீட்டிற்கு சோகமாக வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த கீர்த்தனா யாரிடமும் பேசாமல், தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர்கள் கீர்த்தனாவின் அறைக்குள் சென்று பார்த்தார்கள். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அறைக்குள் கீர்த்தனா தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.

மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற போலீசார், தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் மாணவி கீர்த்தனா, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அவர் எழுதிய கடிதத்தில், ''எனது பெற்றோர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அந்த சிரமத்திலும் என்னை படிக்க வைக்கின்றனர். ஆனால் நான் கல்லூரியில் நடைபெற்ற பருவத்தேர்வை சரியாக எழுதவில்லை.  இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என அதில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இளம் வயதில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

SUICIDEATTEMPT, COLLEGESTUDENT, CHENNAI, EXAM, UNDERPERFORMING, YOUNG GIRL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்