'2020 எப்படி போச்சு'... 'பெசன்ட் நகரில் பெண்களிடம் யூடியூப் சேனல் எடுத்த 'ஆபாச’ பேட்டி'... காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்ததாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்த வருடம் உங்களுக்கு எப்படி இருந்தது, சந்தித்த பிரச்சனைகள் மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த 'சென்னை டாக்ஸ்' என்ற யூடியூப் சேனல் 2020 எப்படிப் போனது என்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளனர்.

அப்போது அதில் ஒரு பெண்ணிடம் பேசியது மிகவும் ஆபாசமாக இருந்ததாக பெசன்ட் நகரை சேர்ந்த லெட்சுமி என்ற பெண் அந்த யூடியூப் சேனல் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்ததாகச் சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலின் (Chennai Talks YouTube channel) தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சில யூடியூப் சேனல்கள் 'மக்கள் கருத்து' என்ற பெயரில் பொது இடங்களில் மக்களிடம் கேள்வி கேட்டு, அதை வைரல் வீடியோவாக்கி வருகின்றனர். வைரலாக வேண்டும் என்பதற்காக சில கேள்விகள் தரம் தாழ்ந்து கேட்கப்பட்டு வருவதாகப் பலரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் இந்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்