அடையாறு கரையோர மக்களுக்கு போலீசார் ‘எச்சரிக்கை’.. நிரம்பும் ‘செம்பரம்பாக்கம்’ ஏரி.. வீடுவீடாக சென்று விழிப்புணர்வு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதால் அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னையை பொறுத்தவரை விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. இதனால் அடையாறு ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் குன்றத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை தற்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் விஜயகுமார், செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘வணக்கம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர் பகுதியில் நான் பல வருடங்களாக குடியிருந்து வருகிறேன். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட பொழுது எங்கள் பகுதியிலிருந்து அடையாறு வரை பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. உயிர் சேதமும் ஏற்பட்டது.

இந்த ஆண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 21 அடியை தாண்டி உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் 2015ம் ஆண்டை போல பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

ஆகவே தாங்கள் கவனத்தில் இதைக் கொண்டு முன்னேற்பாடாக ஏரியில் உள்ள தண்ணீரை அளவுடன் திறந்துவிட உத்தரவு பிறப்பித்தால் கரையோரம் இருப்பவர்களுக்கு உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்க இயலும். எனவே தயவுகூர்ந்து இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்களால் இதை செய்ய இயலும் என நான் ஒருமனதாக நம்புகிறேன். கொரோனா எனும் கொடு நோயிலிருந்து நம் தமிழக மக்களை எவ்வண்ணம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்களோ, அவ்வண்ணமே கரையோரம் வசிக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்’ என நடிகர் விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்