திருடுறப்போ வசமாக சிக்கிய கொள்ளையன்.. சிக்கின உடனே ஸ்பாட்ல தோணின ஒரு ஐடியா.. வந்த வேலையை பக்காவா முடிச்சிட்டு எஸ்கேப்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: சென்னையில் மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்து கடையில் பணிபுரிபவர் என சொல்லி எஸ்கேப் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

சென்னை காசி தியேட்டர் எதிரே அல் அமீன் என்ற பெயரில் டீ கடை மற்றும் பேக்கரி நடத்தி வருபவர் அப்துல் ரசிக். கொரோனா இரவு நேர ஊரடங்கு காரணமாக நேற்று இரவு 9.40 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டுக்கு கிளம்பி சென்றுள்ளார்.

காவலாளியிடம் சிக்கிய திருடன்:

இந்நிலையில் நடு இரவு ஒரு மணியளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த ஏ.டி.எம் செக்யுரிட்டி அந்த நபரிடம் எதற்காக இந்த நேரத்தில் ஷட்டரை உடைக்குறீர்கள் யார் நீங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், தான் இந்த கடையில் தான் பணியாளாக வேலை பார்த்து வருவதாகவும், தன்னுடைய பொருட்கள் மற்றும் பர்ஸ் ஆகியவை கடையின் உள்ளே இருப்பதாகவும் கூறியுள்ளார். மீளும் தான் வந்து எடுத்துக் கொண்டு போவதை கடை முதலாளியிடம் தெரிவித்ததாகவும் கூறியிள்ளார். இதை நம்பிய காவலாளி அவருக்கு உதவி செய்துள்ளார்.

சாக்குப்பையோடு வெளியேறிய நபர்:

அதற்கு பிறகு, கடைக்குள் சென்ற மர்ம நபர் கடையில் இருந்த ரூபாய் 6000 ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள், கல்லாவில் இருந்த ரூபாய் 25 ஆயிரம் பணம் மற்றும் 8 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை ஒரு சாக்குப்பையில் போட்டு கட்டிக் கொண்டு வெளியே வந்துள்ளார்.

உதவிய நபர்கள்:

மீண்டும் கடையின் ஷட்டரை இழுத்து அடைப்பதற்கு சிரமமாக இருந்த காரணத்தினால் அப்போது ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒருவரைக் கூப்பிட்டு, தான் கடையில் பணிபுரியும் ஊழியர் என்று கூறி ஷட்டரை மூட உதவுமாறு கேட்டுள்ளார். இதனால் அந்த நபரும் கடையின் ஷட்டரை மூடுவதற்கு கொள்ளையனுக்கு உதவி செய்துள்ளார்.

சிசிடிவி கண்டு கடும் அதிர்ச்சி:

பின்னர் கடையை மூடிவிட்டு கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். காலையில் கடையை திறந்த உரிமையாளர் கடும் அதிர்ச்சி அடைந்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையன் கடையை உடைத்து திருடி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் கடை ஊழியர் என நினைத்து கொள்ளையனுக்கு இரண்டு பேர் உதவியிருப்பதும் சிசிடிவி வீடியோவில் தெரிய வந்தது. கடை உரிமையாளர் இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குமரன் நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடனை வலைவீசி தேடி வருகின்றனர்.

CHENNAI, SHOP, கொள்ளை, சென்னை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்