‘சோதனை ஓட்டம் வெற்றி’.. இனி ‘ஈசியா’ எங்க வேணாலும் போகலாம்.. சென்னை மெட்ரோ ‘அசத்தல்’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் இடையே முதற்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப்பணிகள் ரூ.3,700 கோடியில் நடைபெற்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இத்தடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்றன.

மொத்தம் 9 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த வழித்தடத்தில் சர் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 8 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள், தண்டவாளம், சிக்னல்களை அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்த தடத்தில் இரு மார்க்கத்திலும் டீசல் ரயில் இன்ஜின் இயக்கி கடந்த 26ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து தெரிவித்த மெட்ரோ ரயில் அதிகாரிகள், ‘சென்னையில் அடுத்த கட்டமாக வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ரயில் இன்ஜின் இயக்கப்பட்டு வெற்றிகரமாக ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் எஞ்சியுள்ள பணிகள், தொழில்நுட்ப பணிகளை நிறைவு செய்ய உள்ளோம். இதனை அடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு மெட்ரோ ரயிலை இயக்கியும், ரயில் நிலையங்களில் ஆய்வு நடத்தியும் ஒப்புதல் அளிப்பார்கள்.

இந்த தடத்தில் ஜனவரி இறுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது பயன்பாட்டுக்கு வரும்போது வடசென்னை மக்கள் விமானநிலையம், சென்ட்ரல், எழும்பூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக செல்ல முடியும். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்’ என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்