'மீண்டும் வரப்போகும் 'சிங்காரச் சென்னை 2.0' திட்டம்'... 'முதல்வர் ஸ்டாலின் போட்டுள்ள வேற லெவல் பிளான்'... என்னென்ன வசதிகள்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதல்வர் ஸ்டாலினின் கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை மீண்டும் மறு உருவம் பெற உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மேயராக பதவி வகித்த காலத்தில் ​ ‘சிங்காரச் சென்னை’ திட்டத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, தமிழகத்தில் அதிமுக அரசு தொடர்ந்து அமைந்த நிலையில், திமுகவின் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் திமுக தலைமையிலான ஆட்சி தற்போது அமைந்துள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில், சிங்கரா சென்னை திட்டத்திற்கான முன் முயற்சியின் இரண்டாம் கட்டத்திற்கான திட்டங்களை இறுதி செய்வதற்காக ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

இந்த திட்டத்தின் மூலம் நகரப்பகுதிகளை அழகுபடுத்தல், பாரம்பரியம் பேணுதல், கலாச்சாரம் மற்றும் கலைகளை அணுகல் மற்றும் அவற்றின் உள்ளடக்கம் வெளிப்படுத்துதல், கல்வி, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், போக்குவரத்து மற்றும் இயக்கம், மின் ஆளுமை மற்றும் கண்டுபிடிப்பு, நகர்ப்புற இடங்களை மறுபரிசீலனை செய்தல் என முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

நகரின் அழகுபடுத்தலில் ‘Project Blue’ முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் பல கடற்கரைகளின் விரிவான வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். நகரத்தில் நீருக்கடியில் மீன்வளம் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கான அக்வா மண்டலங்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்கரை முகப்பு வளர்ச்சி திருவொற்றியூர் மற்றும் உத்தண்டி உள்ளிட்ட ஆறு இடங்களைச் செயல்படுத்தப்படும்.

இதில், 21.6 கி.மீ. பவளப்பாறைகளின் தலைமுறைக்கு பயோராக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான கடற்கரைகளைப் பார்க்கும் தளங்கள் கடற்கரைகளில் உருவாக்கப்படும். அண்ணா டவர் பூங்காவை மறுவடிவமைப்பதற்காக பொது ஆலோசனையை நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால், நகரில் இந்த இடத்திற்கான மதிப்பு கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் உள்ள மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் ரவுண்டானாக்களும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மாடி பூங்கா மற்றும் விக்டோரியா பப்ளிக் ஹால் போன்ற பாரம்பரிய அடையாளங்கள் புதுப்பிக்கப்பட உள்ளது. மாணவர்கள் அடிப்படைக் கல்விக் கொள்கைகளைக் கற்க அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணித பூங்கா ஆகியவை நகரத்தில் உருவாக்கப்படும்.

திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு செல்லப்பிராணி பூங்கா, அறிவியல் பூங்கா மற்றும் பல விளையாட்டு வளாகங்களும் உருவாக்கப்பட உள்ளது. சிங்கரா சென்னை 2.0 திட்டத்தில் சூழலியல், கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, சென்னை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிலைத்தன்மைக்கான உலகளாவிய இடமாக நகரத்தை மறுவடிவமைப்பு செய்வதே நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்