'வீடு வீடா நடக்கப்போகும் சோதனை'... 'தினமும் 50 ஆயிரம் தடுப்பூசி'... சென்னை மாநகராட்சியின் மெகா திட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பல அதிரடி திட்டங்களைத் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் வீடு வீடாகக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், தடுப்பூசி என மூன்று வடிவங்களில் சென்னை மாநகராட்சி பல திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதோடு 45 வயதுக்கு மேற்பட்டோர் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , ''களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை உடனடியாகக் கண்டறிவார்கள். அவர்களுக்கு எங்களுடைய மருத்துவ முகாம்களில் பரிசோதனை நடத்தி, தொற்று இருந்தால் அதற்கு அடுத்த நடைமுறைகளைத் தொடங்குவோம். சிகிச்சை ஆரம்பிக்கும் பட்சத்தில் உயிரிழப்புகளை 99 சதவீதத்துக்கும் மேல் குறைக்கலாம்.

கடந்த ஆண்டு 12,000 களப்பணியாளர்களை வைத்து கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டோம். இந்த ஆண்டு 6,000 களப் பணியாளர்களை வைத்து ஆரம்பித்துள்ளோம். போன ஆண்டு 150 வீடுகள் வரை ஒரு நபருக்குக் கொடுத்தோம். இந்த ஆண்டு 250 வீடுகள் ஒரு நபருக்குக் கொடுத்துள்ளோம். இதில் கூடுதலாக ஆட்களைப் பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளோம்.

இதுவரை 1,15,000 காய்ச்சல் முகாம்களை அமைத்துள்ளோம். இதில் சிறப்பு என்னவென்றால் தெருவாரியாகக் கணக்கெடுக்க முடியும். தெருவாரியாக எங்களிடம் விவரம் உள்ளது. அதை ஆய்வுசெய்து எந்தத் தெருவில் தொற்று அதிகம் உள்ளது என்பதை அறிந்து மருத்துவக் குழு சென்று உரியச் சிகிச்சை அளிக்க முடியும். தடுப்பூசி. சென்னையைப் பொறுத்தவரை 9 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுவிட்டோம். 10 லட்சத்தை நெருங்கி வருகிறோம். இதில் இன்னும் போடவேண்டியுள்ளது.

45 வயதுக்கு மேல் உள்ள நபர்களின் எண்ணிக்கையே இன்னும் 15 லட்சத்துக்கு மேல் உள்ளது. எங்களிடம் தெருவாரியாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரம் உள்ளது. அவர்களைக் கண்டறிந்து மத்திய அரசு கூறியுள்ளது போல் 2 தெருக்களுக்கு ஒரு தடுப்பூசி முகாம் மூலம் அவர்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும். தற்போது தேர்தல் காலமானதால் தினசரி 35,000 பேர் வரை தடுப்பூசி போட்டு வந்தது சற்று குறைந்தது.

இனி வரும் காலங்களில் மீண்டும் வேகமாகக் கொண்டுவர உள்ளோம். அதன் மூலம் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் பேர் வரைக்கும் தடுப்பூசி போடப்போகிறோம். இதன் மூலம் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் 20 முதல் 25 லட்சம் பேருக்குப் போட்டுவிட முடியும். ஏன் 45 வயதுக்கு மேற்பட்டோர் என்று சொல்கிறோம் என்றால் அவர்களுக்குத்தான் தொற்று தாக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.

இளம் வயதினருக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அதைத்தான் வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் 45 வயதுக்கு மேற்பட்டோரைக் குறிக்கோளாக வைத்துள்ளோம். சென்னையில் பல இடங்களில் 10 மையங்கள் மீண்டும் சில நாளில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். கடந்த ஆண்டு 5,500 நோய்த் தொற்றுள்ளவர்கள் இருந்தனர். ஆனால் அப்போது 22,000 படுக்கைகள் நமக்கு இருந்தன. ஆகவே படுக்கைகள், சிகிச்சை மையங்கள் குறித்த தயக்கம் வேண்டாம்'' என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்