'புது புது டெக்னிக்'... 'அதிகாரிகளை சுத்தலில் விடும் கடத்தல்காரர்கள்'... 'சாக்ஸ்ஸை கழற்ற சொன்னபோது தெரிய வந்த உண்மை'... சென்னையில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிகாரிகள் எவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கடத்தல்காரர்கள் ஏதோ ஒரு வழியைக் கண்டுபிடித்துக் கடத்தல் பொருட்களை வெளியே கொண்டு வந்து விடுகிறார்கள்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிரமாகக் கண்காணித்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாகச் சென்னைக்கு விமானம் வந்தது.

அந்த விமானத்தில் உள்நாட்டுப் பயணியாகத் திருவனந்தபுரத்திலிருந்து பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது அனஸ் என்பவரைச் சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் ஒருவித பதற்றத்துடன் காணப்பட்டார். எனவே அவரது உடைமைகளைச் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர் அணிந்து இருந்த பேண்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். விசாரணையில் சார்ஜாவில் இருந்து அந்த தங்கத்தைக் கடத்தி வந்தவர், விமான இருக்கையின் அடியில் அதை மறைத்து வைத்துவிட்டு திருவனந்தபுரத்தில் இறங்கி விட்டதாகவும், பின்னர் உள்நாட்டுப் பயணியாகத் திருவனந்தபுரத்தில் ஏறிய தான் இருக்கையின் அடியிலிருந்த தங்கத்தை எடுத்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

அவரிடம் இருந்து ரூ.59 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 280 கிராம் தங்கத்தைச் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அதேபோன்று துபாயிலிருந்து லக்னோ வழியாகச் சென்னை வந்த விமானத்தில் உள்நாட்டுப் பயணியாக வந்த சென்னையைச் சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது என்பவர் வந்தார். இவரும் அதேபோல் விமான இருக்கையின் அடியில் மறைத்து வைத்து இருந்த தங்கத்தைத் தனது கால் உறைக்குள்(சாக்ஸ்) மறைத்து எடுத்து வந்தார். 

அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.79 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 730 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவங்களால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்