4 மாசத்துல 12 லட்சம் அபேஸ்.. வேலை பாத்த இடத்தில் வேலையை காட்டிய பெண்.. எல்லாம் லவ்வருக்காக தான்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நான்கு மாத காலத்தில், வங்கியில் இருந்த 12 லட்ச ரூபாய் காணாமல் போன நிலையில், விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Advertising
>
Advertising

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர் ஆவார்.

இவரது மகன் அகஸ்டின் (வயது 58). மேலும், அகஸ்டினின் மனைவியின் பெயர் ஷீலா (53). தந்தையின் முதுமை காரணமாக, அவரை பார்த்துக் கொள்ள வேண்டி, அரும்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த வளர்மதி என்பவரை, அகஸ்டின் வேலைக்கு வேண்டி நியமித்துள்ளார். வளர்மதி கடந்த 15 ஆண்டுகளாக ஜான் வீட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

காணமால் போன 12 லட்ச ரூபாய்

இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் சாலிகிராமம் பகுதியில் உள்ள தந்தையின் வங்கிக் கணக்கில் பணம் எடுக்க வேண்டி அகஸ்டின் சென்றுள்ளார். அங்கே, அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.  கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்தாண்டு பிப்ரவரி வரை, ஜானின் வங்கிக் கணக்கில் இருந்து வேறு வங்கிக்கு, சுமார் 12 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது அறிய வந்துள்ளது.

போனை பயன்படுத்திய மகள்

இது பற்றி போலீசில் புகார் ஒன்றை அகஸ்டின் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் வங்கிக் கணக்கிற்கு, அந்த 12 லட்ச ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி, அகஸ்டினிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தன்னுடைய வீட்டில் வேலை பார்க்க வரும் வளர்மதி, அவரின் மகளையும் அங்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், ஜான் மற்றும் ஷீலா ஆகியோரின் மொபைல் போன்களையும் வளர்மதியின் மகள் பயன்படுத்தி வந்துள்ளது பற்றி தெரிய வந்துள்ளது.

காதலனுக்கு பணம் அனுப்பிய பெண்

தொடர்ந்து, வளர்மதியிடம் விசாரணை நடத்தியதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. அதன்படி, ஜானின் செல்போனில் இருந்து அவருக்கு தெரியாமல், வளர்மதியின் மகள், 12 லட்ச ரூபாய் பணத்தை தனது காதலன் சதீஷ்குமாருக்கு அனுப்பியதும், பின்னர் காதலனுடன் தலை மறைவானதும் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர், காதல் ஜோடியின் மொபைல் சிக்னல் மூலம், பாண்டிச்சேரி பகுதியில் இருந்த அவர்களை சைபர் க்ரைம் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

சொகுசு பைக்கும், விலை உயர்ந்த செல்போனும்

தொடர்ந்து, வளர்மதியின் மகள் அளித்த தகவலின் படி, தாய் வேலை பார்த்து வந்த உரிமையாளர் வங்கிக் கணக்கில் இருந்து, சதீஷ்குமார் அக்கவுண்டிற்கு பரிவர்த்தனை செய்த பணத்தில், சொகுசு பைக், 3 சவரன் செயின், ஒரு லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 4 செல்போன்கள், உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்ததும் தெரிய வந்தது.

பின்னர், அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரம், பைக், 3 சவரன் செயின் மற்றும் 4 செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHENNAI, BANK ACCOUNT, TRANSACTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்