ஹனிமூன் பீரியட் முடிந்தது! அக்னி பரிட்சைக்கு தயாரான ஸ்டாலின்.. அதிகாரிகளின் மீது கடுப்பில் முதல்வர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில்,  அதிகாரிகள் மீது முதல்வர் மு க ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

Advertising
>
Advertising

தமிழகத்தில் இந்த பொங்கலுக்கு, 2 கோடியே 15 லட்சத்து 67,114 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 18,946 ஈழத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,297 கோடி மதிப்பில் கரும்பு மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு பூர்வாக நடவடிக்கைகள் மூலம் பொருட்கள் வாங்கப்பட்டன. பொங்கல் பையை ஒப்பந்ததாரர்கள் மூலம், சிவகாசி, திருப்பூர், பவானி பகுதிகளில் உள்ள பை தயாரிப்பாளர்களுக்கு 2.16 கோடி பை தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டது.  கரும்பை பொறுத்தவரை விவசாயிகளிடமே நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு கரும்பு ரூ.33 என்ற அடிப்படையில், 6 அடி உயரத்தில் நல்ல தடிமன் உள்ளதாக இருக்க வேண்டும் என்றும், கரும்பை வெட்டிக் கொடுக்கக்கூடாது என்று வரைமுறைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து ஜன.4-ம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் இப்பணி தொடங்கியது. விநியோகம் தொடங்கியதுமே, முதலில் பை பற்றாக்குறையால் பொதுமக்கள் தங்கள்பைகளில் வாங்கிக் கொள்ளும்படியும், அதன்பின் பை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொங்கலுக்கு கொடுக்கப்பட்ட வெல்லம் உருகியதாகவும், புளியில் பல்லி இருந்ததாகவும் புகார்கள் கிளம்பின.

பொங்கல் பொருட்கள் விநியோகத்தில் பொருட்களின் தரம், எடை குறித்தும் பொதுமக்கள் ஆவேசமடையும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின. இந்நிலையில் பொங்கல் தொகுப்பு பெறாதவர்கள் ஜன.31 வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொருட்கள் பெறச் சென்றவர்களுக்கு பொருட்களின் எண்ணிக்கை குறைவாக பெற்றதாகவும், கரும்பு தரப்படவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் ரூ.500 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக நேற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மீது குற்றம் சாட்டினார். இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பொங்கல் பை விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை, பொருட்கள் கொள்முதலில் புகார்கள், தரம் குறைந்த பொருட்கள் நிராகரிப்பு, புதிய பொருட்கள் மீண்டும் பெறப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, பல்வேறு தகவல்கள் தனக்கு தெரிவிக்கப்படாதது குறித்து முதல்வர் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதில் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

MKSTALIN, DMK, EDAPPADIKPALANISWAMI, AIADMK, ஸ்டாலின், தமிழகம், பொங்கல், ரேசன் பொருட்கள், ஊழல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்