‘திருட்டு’ போனுக்காக தொடங்கிய ‘தொடர்’ கொலைகள்.. சரியாக 1 வருடம் காத்திருந்து.. ‘அண்ணன்’ செய்த ‘குலைநடுங்கும்’ சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை போரூரை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரியில் புதர்மண்டி இருந்த காலி இடம் ஒன்றில்  தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த இளைஞர் ஒருவரின் சடலத்தை மாங்காடு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்தவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும், அவர் அப்பகுதியைச் சேர்ந்த ஜெயசூரியா (வயது 20) என்பதும், தெரியவந்தது. இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த வினோத், லோகேஷ் ஆகியோர் போரூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களுள் வினோத், தனது தம்பியின் கொலைக்கு பழி வாங்கும் விதமாக, பதிலுக்கு ஜெயசூரியாவை கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார். ராகேஷ் என்பவரை வசந்தகுமார் என்பவர் கடந்த வருடம், வழிப்பறி செய்த செல்போன்களை பங்குபிரித்துக்கொள்வதில் உண்டான தகராறில் கொலை செய்தார். இந்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று விட்டு வெளியே வந்த வசந்தகுமாரை, ராகேசின் நண்பர்கள் பழிவாங்கும் நோக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தீர்த்து கட்டினர்.

இந்த ஸ்கெட்சில் ஜெயசூர்யா முக்கிய பங்காற்றியதை அறிந்த வசந்தகுமாரின் அண்ணன் வினோத், தனது தம்பி வசந்தகுமாரின் சாவுக்கு பழி தீர்ப்பதற்காக காத்திருந்ததுடன், ஜாமீனில் வெளியே வந்ததும் ஜெயசூரியாவை பிடித்து, கை, கால்களை கட்டிப்போட்டு தலையில் கல்லைப்போட்டு கொன்றுள்ளார். சரியாக வசந்தகுமார் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கழித்து, அதே மாதம் ஆகஸ்டு மாதத்தில், தனது தம்பி வசந்தகுமாரின் கொலைக்கு பழிக்குப்பழியாக ஜெயசூர்யாவை, வினோத் கொன்றதும் தெரியவந்தது. மேலும் இந்த கொலையில் வேறு யாரெல்லாம் தொடர்புடையவர்கள் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்