‘சூரரைப் போற்று’ பார்த்து நண்பர்கள் அதிர்ப்தி.. ‘உண்மையை அப்படியே சொல்லியிருந்தால்...!’.. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் பதிவிட்ட ‘உணர்ச்சிகரமான’ பதிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சூரரைப் போற்று படம் பார்த்து அதிர்ப்தியடைந்த தனது நண்பர்களுக்கு கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள், அரசு அதிகாரிகள் என பலரும் தற்போது வரை வாழ்த்தி வருகின்றனர். இத்திரைப்படம் இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை பார்த்துவிட்டு அதிர்ப்தியடைந்த தனது நண்பர்களுக்கு கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘சூரரைப் போற்று திரைப்படம் எனது புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கையை உண்மையாகச் சொல்லவில்லை என எனது சில பள்ளி, ராணுவ நண்பர்கள் மற்றும் டெக்கானில் (Deccan) சக ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது திரைப்படம் என்பதற்காக சற்று கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த மசாலாவுக்கு கீழ் நல்ல ஆழமுள்ள விஷயங்கள் உள்ளது என்று அவர்களிடம் சொன்னேன். உண்மையை அப்படியே சொல்லியிருந்தால் அது ஆவணப்படமாகியிருக்கும். அதற்கும் மதிப்பு உள்ளது. ஆனால் அது வேறு வகையான சினிமா.

ஒரு நாயகன் துணிச்சல் மிக்கவராக தெரியலாம். ஆனால் அவரும் பலவீனமானவர்தான். நாயகர்களுக்கு குடும்பத்திடமிருந்தும், மனைவியிடமிருந்தும் உணர்ச்சி ரீதியில் ஆதரவு தேவை என்பதை இந்த திரைப்படம் காட்டுகிறது. நாயகனின் குழுவில் இருப்பவர்கள் நாயகனை விட அதிகமாகவே தியாகம் செய்கிறார்கள்.

ஒரு மனைவியால் தனது கனவை விட்டுக் கொடுக்காமல் கணவரின் லட்சியத்தை பகிர்ந்து கொள்ள முடியும். அவளால் தன்னை தாழ்த்திக் கொண்டு, தனது சொந்த அடையாளத்தை, சுய மதிப்பை இழக்காமல் ஒரு ஆணுக்கு ஆதரவு தர முடியும். கணவன் சோர்வடையும் போது அவனுக்கு ஊக்கம் தர முடியும்.

அபர்ணா மூலமாக சுதா இதை மிக தெளிவாக காட்டியிருக்கிறார். மேலும் இது ஒவ்வொரு முறை வீழ்ந்த பின்பும் எழுச்சி பெறும் ஒருவரின் கதை. நான் தோல்வியைக் கண்டுவிட்டேன், ஆனால் நான் தோற்றுப்போனவனல்ல. நான் எப்போது எல்லாவற்றையும் விட்டுச் செல்கின்றேனோ அப்போதுதான் தோற்றுப்போனவன் என ஒருவர் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் கதை இது.

ஒவ்வொரு முறை விழும் போதும் நான் எழுவேன். இது விடாப்பிடியாக இருப்பதை பற்றியது மட்டுமல்ல, நல்லவர்களும் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள், சூரியன் நம் வானத்தில் உதிக்கும், கதவுகள் திறக்கும் என்று நம்புவதும் தான். இதுதான் இந்த திரைப்படத்தின் உண்மையான செய்தி. அதை நம்பும்படி சூர்யா அட்டகாசமாக நடித்திருக்கிறார்’ என கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்