'நான் டீக்கடைல இருக்குற நேரம் பார்த்து...' 'என் பொண்டாட்டி, 2 குழந்தைங்களையும்...' துரோகம் செய்த நண்பன்...கூலித்தொழிலாளி கண்ணீர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நிலம் வாங்கி தருவதாக கூறி கூலி தொழிலாளியின் மனைவி, மகள்களோடு பணத்தை சுருட்டி கொண்டு சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை போரூர், அம்பாள் நகர் ரோஜா தெருவில் வசித்து வருபவர் கேசவன் (38). இவருக்கு கனகலக்ஷ்மி என்ற மனைவியும் அக்ஷயா (12), மோனிஷா (8) இரு மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்களும் போரூர் சென்ட் ஜான்ஸ் பள்ளியில் படித்து வந்துள்ளனர். அப்பகுதியில் டீ கடையை நடத்தி வரும் கேசவன் தினமும் அதிகாலை நான்கு மணிக்கு டீக்கடையை திறந்த பின்பு இரவு பதினோரு மணிக்கு மேல்தான் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு செல்வார்.

இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி 6 மணி அளவில் கேசவன் தந்து இரு மகள்களையும் டியூஷனில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு டீ கடைக்கு சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் கடையை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்ற போது அவரது மனைவியும், மகள்களும் மாயமாகியுள்ளனர். இதையடுத்து அதிர்ச்சியான அவர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவர்களை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கேசவன் 4 ஆம் தேதி அன்று அய்யப்பன்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் காணாமல் போன மனைவி, மகள்களை போலீசார் இன்னும் மீட்கப்படாமல் இருப்பதால் நீதிமன்றத்தை நாடியுள்ளார் கேசவன்.

இதற்கிடையில் கேசவன் அளித்துள்ள மற்றொரு அறிக்கையில் சில திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், டீ கடை நடத்தி வந்த கேசவனுக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மதுரைவாயிலை சேர்ந்த  முல்லை விவேக் என்ற நில புரோக்கருடன் அறிமுகம் கிடைத்துள்ளது. கேசவனுக்கு நிலம் வாங்கி கொடுக்க உதவுவதாக கூறி நட்பை வளர்த்துள்ளார் விவேக்.

விவேக் அவ்வப்போது கேசவனின் வீட்டுக்கு சென்றும் வந்துள்ளார். இந்தநிலையில் கேசவன் டீ கடையில் இருக்கும் நேரங்களில் அவரது வீட்டுக்கு செல்லும் விவேக், கனகலட்சுமிக்கு பரிசுகள் வாங்கிக் கொடுப்பது, ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து கொடுப்பது என நெருங்கி பழகியுள்ளார். அவரது செல்போன் எண்ணையும் வாங்கியுள்ளார். அதன் பிறகு இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அப்போது ஆசை வார்த்தை கூறி கேசவன் மனைவியை, விவேக் தன் பக்கம் இழுத்துக்கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவம் நடந்த நாளன்று காரில் கேசவனின் வீட்டுக்கு சென்ற  விவேக், நிலம் வாங்குவதற்காக அவர்கள் வைத்திருந்த 10 லட்சம் ரூபாயுடன், கனகலக்ஷ்மி மற்றும் இரு மகள்களையும் அழைத்து கொண்டு சென்றுள்ளார். இதன் பிறகுதான் கேசவன் வீட்டுக்கு சென்று பார்த்து மனைவி, மகள்களை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். நகை பணத்திற்காக தமது மனைவியை மூளைச்சலவை செய்து அழைத்துச் சென்றுவிட்டதாக கேசவன் குற்றம்சாட்டியுள்ளார். போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்து, மனைவியையும், குழந்தைகளையும் மீட்டுத் தர வேண்டும் என அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு மாதங்கள் ஆகியும் தனது குடும்பம் குறித்து எந்த தகவலும் தெரியாததால், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்ற பேரதிர்ச்சியில் மூவரையும் கண்டுபிடித்து தருமாறு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை அளித்துள்ளார் கேசவன்.

BETRAYED

மற்ற செய்திகள்