‘என்ன இந்த பார்சல் மட்டும் வித்தியாசமா இருக்கே’!.. சந்தேகத்துடன் பிரித்த அதிகாரிகள்.. சென்னை விமான நிலையத்தில் நடந்த நூதன கடத்தல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை விமான நிலையத்தில் ஆரஞ்சு ஜூஸ் பொடி டப்பாவில் தங்கம் கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் சிலர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதால், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து சென்னை முகவரிக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. சென்னை விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது நான்கு TANG ஆரஞ்சு ஜூஸ் பொடி டப்பாக்கள், வழக்கத்தை விட அதிக கனமாக இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், ஆரஞ்சு ஜூஸ் பொடி டப்பாவை சோதனை செய்துள்ளனர். அப்போது அதற்குள் சிறு சிறு துண்டுகளாக தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து உடனே ஒரு சல்லடை மூலம் அந்த தங்கக்கட்டிகள் பிரித்து எடுக்கப்பட்டன. மொத்தமாக 2.5 கிலோ தங்கட்டிகள் அந்த டப்பாக்களுக்குள் இருந்துள்ளன. இதன் மதிப்பு சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பார்சல் வந்த சம்பந்தப்பட்ட சென்னை முகவரிக்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அந்த முகவரியில் வசிப்பவர்களுக்கும், பார்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. தங்கக் கடத்தலுக்காக தவறான முகவரி பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரஞ்சு ஜூஸ் டப்பாக்களுக்கு நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்