'டிக்கெட் எடுங்க என்று கூறிய கண்டக்டருக்கு'... 'அரசுப் பேருந்தில் போலீசாரால் நேர்ந்த பயங்கரம்'... வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்கக் கூறிய நடத்துனரை, ஆயுதப்படை காவலர்கள் இருவர் சேர்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமுளியிலிருந்து நாகர்கோவில் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்து நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நின்று சென்றது. அப்போது அந்த அரசுப் பேருந்தில், ஆயுதப்படைக் காவலர்களான தமிழரசன் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் ஏறியுள்ளனர். அவர்களிடம் சென்று பேருந்து நடத்துனர் ரமேஷ், அவர்கள் இருவரையும் பயணச்சீட்டு வாங்குமாறு  கூறியுள்ளார். இதற்கு அவர்கள், பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் வகையில், தங்களிடம் வாரண்ட் இருப்பதாக ஆயுதப்படை காவலர்கள் இருவரும் தெரிவித்துவிட்டு, பயணச்சீட்டு எடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களிடம் அந்த வாரண்ட்டை காண்பிக்குமாறு, நடத்துனர் ரமேஷ் கேட்டுள்ளார். ஆனால் வாரண்ட்டை காட்ட மறுத்த காவலர்கள் இருவரும், நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் காவலர்களுக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடத்துனரை காவலர்கள் இருவரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் நடத்துனருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வரத் துவங்கியுள்ளது. இதையடுத்து, அருகிலிருந்த மூன்றடைப்பு காவல் நிலையத்தில் கொண்டுபோய் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுனரிடம், ரமேஷ் கூறியுள்ளார்.

பின்னர் அங்கே, தன்னை தாக்கிய காவலர்கள் இருவர் மீதும் நடத்துனர் ரமேஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆயுதப்படை காவலர்கள் இருவரையும் மூன்றடைப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் காவலர்கள் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் ஆயுதப்படை காவலர்கள் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறப்படும், நடத்துனர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அங்குள்ள நடத்துனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

ATTACKED, DRIVER, BUS, CONDUCTOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்