‘திருமணத்தை மீறிய உறவு’.. ஒத்துப்போன ‘கால் பாதம்’.. ஆண்டிபட்டி ‘நர்ஸ்’ கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நர்ஸ் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வி (45) என்பவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில வருடங்களாக ஆண்டிபட்டி நகரில் உள்ள பாப்பம்மாள்புரத்தில் தங்கி ஆண்டிபட்டி அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக செல்வி பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி அவர் குடியிருந்த வாடகை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த தேனி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து கொலை நடந்த வீட்டில் ரத்த மாதிரிகள், கைரேகை, கால் பாதம், முடி உள்ளிட்ட தடயங்களை சேகரித்து சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே உயிரிழந்த செல்வியுடன் தொடர்பில் இருந்த செல்போன் எண்களை சேகரித்து சந்தேகத்தின் பேரில் பிச்சம்பட்டியைச் சேர்ந்த தாமோதரன் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாமோதரன் சம்பவம் நடந்த அன்று தேனிலிருந்து கொண்டு திருப்பூரில் இருந்ததாக கூறியதால் அவர் மீது சந்தேகம் அதிகரித்தது.

அதனால் அவரை கைது செய்வது குறித்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தாமோதரனின் கைரேகை செல்வியின் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகையுடன் பொருந்தாததால் கைது நடவடிக்கை கைவிடப்பட்டது. இதனால் சரியான கொலை குற்றவாளியை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தவர்களிடம் எடுக்க பட்ட கைரேகை மற்றும் கால் பாதம் அடையாளங்களை மீண்டும் விசாரணைக்கு வருபவர்களிடம் எடுக்க திட்டமிட்டு எடுத்தனர். அதன்படி கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்த தேனி அருகேயுள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரபிரபு (34) வந்தார். இவர் கம்பம் அரசு மருத்துவமனையில் செவலியாக பணிபுரிந்தவர். போலீசார் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மீண்டும் விசாரணைக்கு மறுநாள் காலை வருமாறு எழுதி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மறுநாள் காலை (10-ம் தேதி) ராமச்சந்திரபிரபு உத்தமபாளையம் பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனிடையே சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில், ஒரு கால் பாதத்தின் அளவு பொருந்தி இருப்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டது. அந்த கால் பாதத்தின் அளவு இறந்த ராமச்சந்திர பிரபு கால் பாதத்தின் அளவு என்பதும் தெரியவந்தது. இவர், ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது போலீசாரிடம் சிக்கக் கூடாது என்று எண்ணி, கால் பாதத்தின் அளவை சுருக்கி காண்பித்து சென்றதும், இரண்டாவது விசாரணையில் கால் பாதம் ஒரே மாதிரியாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் போலீசார் விசாரணையில், உயிரிழந்த செல்விக்கு, ராமச்சந்திரபிரபு கடைசியாக தொடர்பு கொண்டதும் தெரியவந்துள்ளது. கொலை நடந்த அன்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ராமச்சந்திர பிரபு சென்று வந்த பல காட்சிகளில் போலீசார் வசம் கிடைத்துள்ளது. அதோடு செல்வி அணிந்து இருந்த 32 கிராம் தங்க நகையை எடுத்துச் சென்று பழனிசெட்டிபட்டி தனியார் வங்கியில் அடமானம் வைத்தது ரூ.75 ஆயிரம் பெற்றதும் தெரியவந்தது. அடமானம் வைக்கப்பட்ட தங்க செயின், செல்வி அணிந்து இருந்ததுதான் என்பதை செல்வியின் கணவர் சுரேஷ் உறுதி செய்தார்.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நர்ஸ் செல்வி, தற்கொலை செய்து கொண்ட ராமச்சந்திரபிரபுவும், ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதும், ராமச்சந்திரபிரபு, செல்விக்கு லட்சக்கணக்கில் பணத்தையும் கடன் வாங்கிக் கொடுத்ததும் தெரிய வந்தது.

சம்பவம் நடந்த அன்று செல்வியின் வீட்டிற்கு, ராமச்சந்திரபிரபு சென்று பணத்தை திரும்ப கேட்டு இருக்கலாம் என்றும், அப்போது நடந்த தகராறில் ராமச்சந்திரபிரபு தாக்கியதில் செல்வி இறந்து இருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர். அதன் பின்னர் செல்வி அணிந்திருந்த 3 பவுன் தங்கச்செயினை எடுத்துச் சென்று பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த ராமச்சந்திர பிரபு, எப்படியும் தன்னை பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ANDIPATTI, HOSPITAL, NURSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்