‘சிக்னல்’ இல்லையென வெளியே சென்ற ‘கர்ப்பிணி’ பெண்... ‘சடலமாக’ கிடைத்த பயங்கரம்... ‘உறைய’ வைக்கும் சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆம்பூர் அருகே கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சுட்டகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி (23). பெற்றோரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்த ரேவதிக்கு நடந்த முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. இதையடுத்து அவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் மாச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். மகேஸ்வரன் ஒசூரில் வேலை செய்வதால் திருமணத்திற்குப் பிறகு அவருடனேயே ரேவதியும் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் 2 மாத கர்ப்பிணியாக இருந்த ரேவதி கடந்த சனிக்கிழமை கணவருடன் தன் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு அவருடைய கணவர் மட்டும் 2 நாட்கள் கழித்து ஊருக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கணவருடன் பேசிக்கொண்டிருந்த ரேவதி வீட்டில் சிக்னல் கிடைக்கவில்லை என ஃபோனை எடுத்துக்கொண்டு மலைப்பகுதிக்கு சென்றுள்ளார்.

வெளியே சென்ற ரேவதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அருகே ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இந்தத் தகவலறிந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு சென்று அவரது உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், “இறந்துகிடந்த ரேவதியின் கழுத்தில் ரத்தக் காயம் இருந்தது. அவர் துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய கழுத்தில் இருந்த 10 பவுன் நகையைக் காணவில்லை என அவருடைய உறவினர்கள் கூறியுள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரேவதி அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடன் நீண்ட நேரமாக செல்ஃபோனில் பேசியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ரேவதியின் முதல் கணவர் மற்றும் விவாகரத்துக்குப் பிறகு அவரை பெண் பார்த்துவிட்டுச் சென்ற நபர் ஆகியோரை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ரேவதியின் கொலையில் அவருடைய சித்தி ஒருவருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CRIME, MURDER, AMBUR, PREGNANT, WOMAN, HUSBAND, PHONE, CALL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்