'முதல்வரை பார்த்ததும் கண்கலங்கிய பெண் எம்.எல்.ஏ'... 'உருக்கத்துடன் சொன்ன வார்த்தை'... ஆறுதல் சொன்ன முதல்வர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதல்வரைப் பார்த்ததும் பெண் சட்டமன்ற உறுப்பினர் கண்கலங்கிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை நெருங்கி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் திருச்சிக்குச் சென்றனர்.

அங்குத் திருச்சி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் ப.குமார், வெல்லமண்டி நடராஜன், இந்திரா காந்தி, பத்மநாபன், பரஞ்ஜோதி, கு.ப.கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் திருச்சி விமான நிலையத்தில் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற பரமேஸ்வரி முருகனுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாமல் முன்னாள் அமைச்சரான பரஞ்சோதிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளித்த பரமேஸ்வரி முருகன், சிட்டிங் எம்.எல்.ஏ.வான தனக்கு இந்த தேர்தலில் சீட்டு வழங்காதது குறித்து கண்ணீருடன் முறையிட்டார்.  அப்போது முதல்வர் அவருக்கு ஆறுதல் கூறி கட்சி பணியாற்றுங்கள் என வழியனுப்பி வைத்தார்.

இது குறித்துப் பேசிய பரமேஸ்வரி முருகன், ''தனக்கு சீட் தந்தாலும், தராவிட்டாலும் முதல்வருக்கு நான் விசுவாசமாக இருப்பேன்'' எனக் கூறி அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தார். இதற்கிடையே ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சரான வளர்மதிக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சரான கு.ப. கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்