‘இப்படியா பண்ணுவ’... 9 வயது சிறுமிக்கு... இளம் தம்பதியால் நடந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உறவினர் மகளை படிக்க வைப்பதாகக் கூறி அழைத்துப் போய், உறவினர் ஒருவர் 9 வயது சிறுமியை கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உட்டன் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ் ரத்தோட் (30) - அனிதா  ரத்தோட் (30) தம்பதி. இவர்கள் அவுரங்காபாத்தின் கன்னாட் பகுதியைச் சேர்ந்த விதவைப் பெண்ணான, தனது உறவினரின் 9 வயது மகள் பாரதியைப் தன்னுடன் தங்க வைத்து, படிக்க வைப்பதாகக் கூறி, வசதி நிறைந்த பிரகாஷ் ரத்தோட், தான் வசிக்கும் தானே பகுதிக்கு கூப்பிட்டுள்ளார்.

நகரத்தில் நல்ல வாழ்க்கை மற்றும் நல்ல படிப்பு வழங்குவதாக கூறியதால், ஏழ்மை நிலையில் மகள் இருக்க வேண்டாம் எண்ணி, சிறுமியை அவருடன் அனுப்பி வைத்துள்ளார் அவரது தாயார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மகளிடம் பேச முடியாமலும், பிரகாஷிடம் இருந்தும் சரியான பதில் வராததாலும் தவித்து போயுள்ளார். பின்னர் சந்தேகமடைந்த தாய், கடந்த 4-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், மேற்கொண்ட விசாரணையில்,  பிரகாஷின் மனைவி அளித்த பதிலால் போலீசார் அதிர்ந்து போயினர்.

சிறுமி பாரதியை ஊரிலிருந்து அழைத்து வந்த இந்த தம்பதி, எந்தப் பள்ளியிலும் சேர்க்காமல், வீட்டு வேலையை செய்ய வற்புறுத்தியுள்ளனர். அனிதாவின் தையல் வேலைக்கும் சிறுமியை பயன்படுத்தியுள்ளனர். மேலும் நகரத்தில், அவர்களது வீட்டில் உள்ள கழிவறையை பயன்படுத்த சிறுமிக்கு தெரியாததால், அடிக்கடி உடையிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இரவிலும் தூக்கத்தில் படுக்கையிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர். இதேபோல், கடந்த நவம்பர் 7-ம் தேதி, சிறுமி சிறுநீர் கழித்ததால், நெஞ்சில் மிதித்து, ‘இப்படியா பண்ணுவ’ என்று கொடூரமாக அடித்துள்ளனர்.

இதில் சிறுமி உயிரிழந்துவிடவே, சிறுமியின் உடலை பையில் போட்டு, இதற்காக தண்ணீர் டிரம் வாங்கி, அதில் சிறுமியை போட்டுள்ளனர். துர்நாற்றம் அடிக்காமல் இருக்க, டிரம் முழுவதும் சிமெண்ட் கலவை கொட்டியுள்ளனர். பின்னர் அங்கு அருகில் வசித்த உறவினரான ஆகாஷ் சவான் (22) உதவியுடன், வாடகைக்கு வண்டிப் பிடித்து சிறுமி உடல் இருந்த டிரம்மை, கசாரா காட் சாலையில் நள்ளிரவில் கொண்டுபோய் வீசியுள்ளனர். இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்ததால், சிறுமியின் தாய் கதறி அழுதார். இதையடுத்து, ஆகாஷ் சவான் மற்றும் அனிதா ரத்தோட் ஆகிய 2 பேரையும் கைதுசெய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளி பிரகாஷ் ரத்தோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

MURDERED, KILLED, CHILD, GIRL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்